என்னோட 50,000 ஓட்டு போச்சே... கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு உருண்டு போராடிய "காந்தி தாத்தா"!
மகாத்மா காந்தி உடையில் வந்த வேட்பாளர் படுத்து உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர்: வந்தது என்னவோ காந்தி தாத்தா கெட்டப்பில்தான்.. ஆனால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தரையில் உருண்டு புரண்டு அமர்க்களப்படுத்தி விட்டார் அரவக்குறிச்சி ரமேஷ்!
அரவக்குறிச்சியில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இங்கு போட்டியிட நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஆசைப்பட்டார்.
இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலகமான அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு காந்தி வேடமிட்டு கையில் தடியுடன் வந்தார்!

4-வது இடம்
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்று இறுதிப் வேட்பாளர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் ரமேஷுக்கு இடம் ஒதுக்கி ஏற்கனவே அறிவிப்பு தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

9-வது இடம்
ஆனால் இப்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அந்தப் பட்டியலை மாற்றி வடிவமைத்துள்ளனர். அதன்படி ஒன்பதாவது இடத்தில் அவருக்கு இடம் ஒதுக்கி பட்டியல் தயார் செய்துள்ளனர். நான்காவது இடத்தில் இருந்த தனது வேட்பாளர் வரிசை எண் 9-வது இடத்துக்கு மாற்றி விட்டதால் கடும் அதிருப்தி அடைந்தார் ரமேஷ். இது தன்னுடைய வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று நினைத்தார்.

வெற்றி வாய்ப்பு
இதனால் அதிகாரிகளிடம் சென்று, "நான் எப்படியும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். இப்போ 4-வது இடத்திலிருந்து 9-வது இடத்துக்கு மாற்றிவிட்டால், என்னுடைய வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்" என்றார். ஆனால் இதற்கு அதிகாரிகள் சரியாக பதில் சொல்லவில்லை போலும்.

நூதன தர்ணா
முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததாலும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பே படுத்து உருண்டு புரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை அங்கிருந்த போலீசார் சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. காந்தி போல கண்ணாடி, வேட்டி, துண்டு, கையில் தடியுடன் ரமேஷ் தரையில் புரள்வதை அங்கிருந்தோர் அனைவருமே நின்று வேடிக்கை பார்த்தனர்.












Click it and Unblock the Notifications