எம்ஜிஆர் கெட்டப்பில் டூயட்.. தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலம்... களைகட்டிய தேர்தல் பிரச்சாரம்..!
கரூர் : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் எம்ஜிஆர் கெட்டப்பில் டூயட் பாடுவது, தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக சென்று வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர் வேட்பாளர்கள்..
தமிழகத்தில் காலியாக உள்ள நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பின்பு மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. கரூரில் திமுக சார்பில் 41 வேட்பாளர்களும், அதிமுக சார்பில் 46 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
உ.பி. சட்டசபை தேர்தல்: நாளை 2-ம் கட்ட வாக்குப் பதிவு- 55 தொகுதிகளில் 586 வேட்பாளர்கள்!
கரூர் தேர்தல் களம்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிமுக, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வீடு வீடாக பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கினர். ஒரு சிலர் காலில் விழுந்தும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் கரூர் மாநகராட்சித் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
திமுக - அதிமுக வேட்பாளர்கள்
கரூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக செந்தில்பாலாஜி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் கரூர் 16வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அண்ணன் நவீன ஆதரித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்வலமாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
எம்.ஜி.ஆர். கெட்டப்பில் டூயட்
முன்னதாக வாக்காளர்களை கவரும் வகையில் எம்ஜிஆர் வேடமணிந்த மேடை நடன கலைஞர்கள் சாலைகளில் நடனமாடி வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தனர். பல மூத்த திமுக தொண்டர்கள் எம்ஜிஆர் கெட்டப்பில் நடனமாடியவரை எம்ஜிஆர் ஆகவே நினைத்து அவர்களும் நடனமாடினர். தொடர்ந்து தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக சென்ற வேட்பாளர் மக்களிடையே வாக்கு சேகரித்தார். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
முக்கியமான வார்டு
16வது வார்டு கரூர் மாநகராட்சியில் தற்போது முக்கிய கவனம் பெற்று இருப்பதற்கு காரணம் இங்கு அதிமுக திமுக வேட்பாளர்கள் மட்டுமல்லாது, திமுக வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மேலும் திமுக அதிமுகவில் சீட் கிடைக்காத பலரும் தங்கள் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து களம் காண்கின்றனர். கூடுதலாக நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் இங்கு போட்டியிடுவதால் 16வது வார்டு முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இதையடுத்து பல முக்கிய தலைவர்களும் இங்கு முகாமிட்டு வாக்குகளை பெற முயன்று வருகின்றனர்.