Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!
தமிழ்நாடு அரசின் மிக முக்கிய மக்கள் நலத்திட்டங்களில் ஒன்றான 'தாயுமானவர் திட்டத்திற்கு' தற்போது ஒரு மிகப்பெரிய சிக்கல் உருவெடுத்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கும் இத்திட்டத்தில், தங்களால் இனி தொடர்ந்து பணியாற்ற முடியாது என்று தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடுமையான பணிச்சுமை, தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமை போன்ற காரணங்களால் ஊழியர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

வரும் ஜூன் மாத இறுதிக்குள் அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் ஜூலை மாதம் முதல் மாநிலம் முழுவதும் உள்ள ஊழியர்கள் இத்திட்டத்தை முழுமையாகப் புறக்கணிக்க நேரிடும் என்றும் தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் கெடு விதித்துள்ளது தற்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
21.7 லட்சம் பயனாளிகள்
தாயுமானவர் திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் (Ration Shops) மூலமாக சுமார் 21.7 லட்சத்திற்கும் அதிகமான முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். உடல்நலக் குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேரில் வர முடியாத எளிய மக்களுக்கு இந்தச் சேவை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.
ஆனால், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு நெருக்கடிகளை அடுக்கடுக்கான எதிர்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளபடி இந்த வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் சேவைக்காக, காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பல மணி நேரம் களப்பணியில் (Field Work) ஈடுபடும் ஊழியர்களுக்கு முறையான உணவு இடைவேளைகளோ அல்லது அவசரத் தேவைகளுக்கான கழிப்பறை வசதிகளோ கூடக் கிடைப்பதில்லை.
இதுமட்டுமன்றி, களப்பணியின் போது ஸ்மார்ட் கார்டு (Smart Card) மற்றும் பயோமெட்ரிக் கருவிகளில் ஏற்படும் தொடர் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக விநியோகம் செய்வதில் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது.
ஜூலை 1 முதல் புறக்கணிப்பு
இந்தச் செயல்பாட்டுப் பிரச்சனைகளுக்கு ஜூன் மாத இறுதிக்குள் அரசு உரியத் தீர்வு காணத் தவறினால், வரும் ஜூலை மாதம் முதல் 'தாயுமானவர் திட்டத்தின்' கீழ் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் பணிகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஊழியர்கள் சங்கம் கறாராகத் தெரிவித்துவிட்டது.
இதை தொடர்ந்து, தமிழ்நாடு உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கடராமன் தற்போது ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார். ரேஷன் கடை ஊழியர்கள் எழுப்பியுள்ள அனைத்துப் பணிசார்ந்த பிரச்சனைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் அரசு மிகுந்த கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைத்து, தொழில்நுட்பக் குறைபாடுகளைக் களைந்து, இந்த திட்டத்தை தொடரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மிக விரைவில் மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications