கரூரில் முதலமைச்சர்.. உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி! உறவினர்களுக்கு ஆறுதல்
கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கரூர் வந்திருக்கிறார். கரூர் வந்த முதல்வர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. நாளை ஒரே நாளில் அனைத்து உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கின்றனர். முன்னதாக நாளை காலை கரூர் வருவதாக இருந்த முதலமைச்சர், முன்னதாக நள்ளிரவு புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்தடைந்துள்ளார்.

நெரிசல் சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், "இந்த நெரிசலுக்கு காரணம் கூடுதலான அளவில் ரசிகர்கள் பங்கேற்றதும், குறிப்பிட்ட நேரத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு வராமல் தாமதப்படுத்தியதும்தான்" என்று கூறுகிருந்தார். இருப்பினும் இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் ஆணையம், விசாரணையை முடித்து அறிக்கையில் என்ன காரணம் என்பதை தெளிவாக விளக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
உயிரிழப்பு சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர், உயிரிழந்தோர் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஸ், பெரிய கருப்பன், மா.சுப்பிரமணி, சிவசங்கர் மற்றும் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications