கரூரில் சாக்கடை தண்ணீரில் கான்கிரீட்! ஒப்பந்ததாரர்கள் அநியாயம்! அதிகாரிகள் அலட்சியம்! தொடரும் அவலம்!
கரூர்: கரூர் மாநகராட்சியில் மனசாட்சியே இல்லாமல் சாக்கடை தண்ணீரில் கான்கிரீட் கலவையை கொட்டும் அவலம் அரங்கேறியுள்ளது.
Recommended Video
இதன் மூலம் கழிவுநீர் கால்வாயின் உயரம் கூடுவதோடு கழிவு நீரில் கான்கிரீட் கலவை செட் ஆகாத நிலையும் ஏற்படும்.
அரசாங்கத்திடம் வாங்கிய பணத்துக்கு கொஞ்சம் கூட நன்றியில்லாமல், யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற வகையில் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ அலட்சியமாக இருக்கிறார்கள்.

தொடர் அவலம்
இரு சக்கர வாகனத்தோடு கான்கிரீட், நின்று கொண்டிருந்த ஜீப்போடு கான்கிரீட், அடிபம்பு குழாயையே அடக்கம் செய்யும் அளவுக்கு கான்கிரீட் என தமிழகத்தில் அவலங்கள் அரங்கேறிய நிலையில், அதையெல்லாம் பின்னும் தள்ளும்படியான ஒரு நிகழ்வு கரூர் மாநகராட்சியில் நடந்துள்ளது. கரூர் மாநகராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட கே.ஏ.நகரில் கழிவு நீரை அகற்றாமலேயே அதன் மீது கான்கிரீட் கலவையை கொட்டி பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அந்த ஒப்பந்ததாரர்.

கழிவுநீர் கால்வாய்
கழிவுநீர் கால்வாயை தூர்வாராமல் அதிலுள்ள குப்பைகளை முறையாக அகற்றாமல் மேலோட்டமாக பணி செய்து கடமை கழிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக சாலை அமைத்தால் ஏற்கனவே இருக்கும் பழைய சாலைகளை பெயர்த்து எடுத்துவிட வேண்டும் என்பது ஒப்பந்ததாரர்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்ட ஒன்று தான். அதேபோல் தான் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் போது கால்வாயின் ஆழத்தை அதிகரிக்கும் வண்ணம் அதிலுள்ள அடசல்களை நீக்கிவிட்டு தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் கான்கிரீட் போடப்பட வேண்டும்.

அவசர கதியில்
ஆனால் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற வகையில் அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலத்தைப் போல் ஒப்பந்த பணிகள் பல இடங்களில் நடக்கின்றன. இந்தப் பணிகளை கண்காணித்து ஆய்வு செய்து அறிவுரை சொல்ல வேண்டிய அரசு பொறியாளர்களோ பல இடங்களில் வாய்மூடி மவுனியாக நின்றுவிடுகின்றனர். இதன் பாதிப்பு இப்போது தெரிவதில்லை, மழைக்காலங்களில் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு காரணமே இது போன்ற கவனக்குறைவான பணிகள் தான்.

சிபாரிசுகள்
இதற்கு முன் இது போன்ற பணிகளை செய்து பழக்கமில்லாத முன் பின் அனுபவமில்லாத நபர்களுக்கு சிபாரிசுகளின் அடிப்படையில் ஒப்பந்தப் பணிகள் கொடுக்கப்படுவதே இது போன்ற அவலங்களுக்கு காரணம் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications