இன்னொருவர் பெத்த குழந்தைக்கு நாம் பெயர் வைக்கக் கூடாது... யாரால் வந்தது சாலை..? கரூர் கலாட்டா..!
கரூர்: கரூரில் புதிதாக மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அது யாரால் வந்தது என்பதில் பெரும் குடுமிப்பிடி சண்டையே நடந்து வருகிறது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் தான் புதிய சாலை மற்றும் மேம்பாலத் திட்டங்களை கரூருக்கு கொண்டு வந்ததாக அதிமுக உரிமைக்கோரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் விஜயகுமார் சிங்கிடம் தாம் வைத்த கோரிக்கையின் விளைவாகவும், தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததன் பயனாகவும் கரூருக்கு புதிய சாலைத்திட்டப் பணிகள் வந்ததாக ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இன்னொருவர் பெத்த பிள்ளைக்கு நாம் பெயர் வைப்பது சரியாக இருக்காது என்றும் அதைப்போல தன்னால் கொண்டுவரப்பட்ட சாலைத்திட்டத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரிமை கோருவது முறையல்ல எனவும் தெரிவித்தார். இது அரசியல் நாகரீகமற்ற செயல் என விமர்சித்தார்.
மேலும், கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்த தம்பிதுரை எதுவுமே செய்யவில்லை என்றும் வாயை திறந்தாலே தம்பிதுரை பொய் பேசக்கூடியவர் எனவும் சாடினார். மேலும், கடந்த 01.06.2020 அன்று மத்திய அமைச்சர் அலுவலகத்தில் இருந்து கரூர் எம்.பி. என்ற முறையில் தனக்கு வந்த அத்தாட்சி கடிதத்தை காட்டினார்.
கூட்டணியை பற்றி பேச பொன்.ராதா யார்...? அவருக்கு என்ன பவர் உள்ளது...? கே.பாலகிருஷ்ணன் கேள்வி..!
இதேபோன்று ஒரு கடிதத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரோ, அதிமுக எம்.பி. தம்பிதுரையோ ஒரு மணி நேரத்தில் காட்ட முடியுமா என்றும் ஜோதிமணி வினவினார். புதிய சாலைப்பணிகள் கோரி அவர்கள் கோரிக்கை விடுத்ததற்காக அத்தாட்சி கடிதத்தை ஒரு மணி நேரத்தில் காட்டினால் தாம் அரசியலை விட்டே விலகத் தயார் என சவால் விடுத்தார்.
மேலும், தனது முயற்சியாலும் கோரிக்கையாலும் கொண்டுவரப்பட்டுள்ள சாலைத்திட்டப் பணிகளை அமைச்சரும், தம்பிதுரையும் தங்களால் கொண்டுவரப்பட்டது என பேசி வருவது மிகுந்த வேதனையை தருவதாகவும் ஜோதிமணி கூறியுள்ளார்.