5 கட்சி தாவிய செந்தில் பாலாஜி! மாவட்டத்தை விட்டே ஓடிட்டாரு! கரூரில் எகிறி பேசிய எடப்பாடி பழனிசாமி
கரூர்: செந்தில் பாலாஜி 5 கட்சிக்கு போனவர், திமுகவில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் விட்டுவிட்டு செந்தில் பாலாஜிக்கு முக்கியமான இலாகாவை கொடுத்தனர். திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது என விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி. மேலும், செந்தில் பாலாஜி, ஊரை விட்டு மட்டுமல்ல, மாவட்டத்தை விட்டே ஓடிவிட்டார் எனவும் கூறியுள்ளார்.
கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கரூர் தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி," கரூர் மாவட்டம் இந்த தேர்தலில் அண்ணா திமுகவின் கோட்டை. இந்த தேர்தலில் கரூரை எந்த கொம்பனாலும் வெல்ல முடியாது. எதிரி நம்மை பலவீனமாக நினைக்கிறார். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும்.
எடப்பாடி பழனிசாமி
நாம் பலவீனம் அல்ல. அவர் ஊரை விட்டு ஓடி விட்டார். ஊரை விட்டு மட்டுமல்ல, மாவட்டத்தை விட்டே ஓடிவிட்டார். அதிமுக மக்களை நம்பி நிற்கிறது. திமுக கூட்டணியை நம்பி இருக்கிறது. ஸ்டாலின் எப்போதுமே திமுக தலைமையிலான கூட்டணி வலிமையை பற்றி மட்டுமே பேசுகிறார். திமுக வலிமை என்று கூற மறுக்கிறார். ஆட்சி மாறினால் காட்சி மாறும். கரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுகவினர் மீது பிசிஆர் வழக்கு, போதை வழக்கு என பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
கரூர் பிரச்சாரம்
உடந்தையாக இருந்த அதிகாரிகள் குறித்து, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இவை அனைத்தும் விசாரிக்கப்படும். அதிகாரிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். யாரும் தப்ப முடியாது. கரூரில் கோவில் இனாம் நிலம் அதிகமாக உள்ளது. இனாம் நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகள், குடியிருப்பு வாசிகள் பல ஆயிரம் ஏக்கரில் வசித்து வருகிறார்கள். இனாம் நில பிரச்சனைக்கு அதிமுக ஆட்சி வந்தவுடன் நிரந்தர தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு உரிய உதவி செய்யப்படும்.
திமுக ஆட்சி
திமுக ஆட்சியில் 24 ஆயிரம் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். 18,000 போக்ஸ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான ஆட்சி, நல்லாட்சியா? திமுக ஆட்சியில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும், பாட்டிகளுக்கும் கூட பாதுகாப்பில்லை. இப்படி சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கக் கூடிய ஆட்சி தேவையா? பெண்கள் மசோதாவுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கிற இந்தியா கூட்டணி அந்த மசோதாவை நிராகரித்துள்ளது.
செந்தில் பாலாஜி
இங்குள்ள முன்னாள் அமைச்சர் எந்த இலக்கா கொடுத்தாலும் அதில் ஊழல் செய்வதுதான் அவரது வேலை. அதில் எப்படி எல்லாம் வருமானம் பார்க்கலாம் என்று சிந்திக்க கூடியவர். போக்குவரத்து, மின்சாரம், கலால் என எந்த இலாகா கொடுத்தாலும் அதில் கொள்ளை அடிக்கக் கூடியவர். அவர் யார் என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். ஸ்டாலின் உங்களை வைத்து வித்தை காமித்து வருகிறார். அவரை நம்பி ஏமாந்து விட வேண்டாம், வாழ்க்கையை தொலைத்து விட வேண்டாம்.
சட்டரீதியாக நடவடிக்கை
கடந்த தேர்தலில் போலி கொலுசு கொடுத்து, ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள். இந்த தேர்தலில் அது முடியாது. கரூர் மாவட்டத்தில் இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும், பணநாயகத்துக்கும் நடக்கும் தேர்தல். ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பது போல, இந்த தேர்தலில் கரூர் மாவட்டத்தில் மக்களை கொண்டு போய் பட்டியில் அடைக்கிறார்கள். இதை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். செந்தில் பாலாஜி உங்களை காப்பாற்ற மாட்டார். 441 நாள் சிறையில் இருந்து வெளியே வந்தவர்தான் செந்தில்பாலாஜி.
திமுக
செந்தில் பாலாஜி 5 கட்சிக்கு போனவர், திமுகவில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் விட்டுவிட்டு செந்தில் பாலாஜிக்கு முக்கியமான இலாகாவை கொடுத்தனர். திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற 8 பேர் அமைச்சராக உள்ளனர். 14 பேர் எம்எல்ஏவாக உள்ளனர்." என்றார்.












Click it and Unblock the Notifications