450 நாள் சிறையில் இருந்தவர்.. இனி செந்தில் பாலாஜி தன்னைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது.. எடப்பாடி
கரூர்: முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு மீறிய அதிகாரம் கொடுத்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜியால் இனிமேல் தன்னைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது. சுமார் 450 நாள்கள் சிறையில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி. அப்படிபட்டவரை நம்பி தவறான செயலில் ஈடுபடுபவர்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்தால் அவர்களையும் எவராலும் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 நாட்கள் பிரசாரம் செய்து வந்தார்.

2-வது நாளான (அக்டோபர் 26ம் தேதி) கரூரில் எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் பேசுகையில், கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பொய். 1.5 லட்சம் ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவால் தேர்வு எழுதும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் 207 பள்ளிகளை மூடியிருக்கிறர்கள். இவர்களெல்லாம் கல்வியிலே சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
அதிமுக தந்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு இப்போது கொடுத்து வருகிறது. தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ளது. இப்போது அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என்று சொல்கிறார்கள். ரூ.12,400 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. செந்தில் பாலாஜி எப்படிபட்டவர் என்று இந்த கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வோரு வேடம் போடுவார். புதுபுது யுக்தியை கையாள்வர். அத்தனையும் கிரிமினல் எண்ணம். கவர்ச்சிகரமாக தேர்தல் நேரத்தில் பேசி வாக்குகளைப் பெறுகிறவர். தேர்தலின் போது வெள்ளிக் கொலுசு கொடுக்கிறேன் எனக்கூறிவிட்டு போலி வெள்ளிக் கொலுசு கொடுத்தவர் செந்தில் பாலாஜி.
தனக்கு ஓட்டுபோட்ட கரூர் மக்களை ஏமாற்றியவர். தேர்தல் முடியும் வரை திமுகவில் இருப்பார். ஏற்கெனவே 5 கட்சிக்கு போய்விட்டு வந்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு மீறிய அதிகாரம் கொடுத்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜியால் இனிமேல் தன்னைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாது. சுமார் 450 நாள்கள் சிறையில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி. அப்படிபட்டவரை நம்பி தவறான செயலில் ஈடுபடுபவர்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்தால் அவர்களையும் எவராலும் காப்பாற்ற முடியாது.
உரிமைக்காக போராடும் மக்களை தடுக்கக் கூடாது. தமிழகத்தில் 96 கலை கல்லூரிகளில் முதல்வர்கள் கிடையாது. அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும். அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததும் அனைவரும் பதற்றத்தில் இருக்கிறார்கள்" இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.












Click it and Unblock the Notifications