நடுங்குதே.. ஈரோடு திமுக பெண் கவுன்சிலர் படுகொலை.. அரைநிர்வாண நிலையில் கிடந்த உடல்! கரூரில் ஷாக்
கரூர்: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண் கவுன்சிலர் கரூர் அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் அரை நிர்வாண நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் சோழ காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 57). இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரூபா (42). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ரூபா திமுகவில் செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரூபாவுக்கு போட்டியிட திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

சென்னசமுத்திரம் பேரூராட்சியில் உள்ள வார்டில் ரூபா திமுக வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற ரூபா சென்னசமுத்திரம் பேரூராட்சியின் திமுக கவுன்சிலராானார். கவுன்சிலராக இருந்தாலும் கூட ரூபா வேலை செய்து வந்தார்.
அதாவது கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூபா வேலை செய்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை தேடி கரூர் சென்றனர். அங்கு அவர் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து ரூபாவை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதோடு அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் தான் நேற்று கரூர் மாவட்டம் பவுத்திரம் அருகே பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தலை நசுங்கிய நிலையில் பெண் ஒருவர் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த பெண் தான் மாயமான திமுக பெண் கவுன்சிலரான ரூபா என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கொடூரமான முறையல் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இருப்பினும் அவரை யார் கொலை செய்தார்கள்? எந்த காரணத்துக்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் திமுக பெண் கவுன்சிலர் கொலை செய்யப்பட்டு இருப்பதும், அவரது உடல் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டு இருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications