தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு.. திமுக பொற்கால ஆட்சியின் அடையாளம் இதுதான்.. முதல்வர் ஸ்டாலின்!
கரூர்: நாட்டின் மற்ற மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை முதல்வர் ஸ்டாலின் சென்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று கரூர் மாவட்டம் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் பகுதியில் நடந்த அரசு விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினார்.
மனம் குளிர்கிறது
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதால் என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. ஏற்கனவே ஒரு லட்சம் மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். தற்போது 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கியுள்ளோம்.
இலக்கு வைத்து சாதிப்பவர் செந்தில் பாலாஜி
15 மாதங்களில் 1.5 விவசாயிகளுக்கு மின் இணைப்பு செய்து கொடுத்துள்ளோம். இதற்கு முன் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இந்த சாதனையை செய்தது கிடையாது. எதையோ சொல்லிவிட்டு, பேசிவிட்டு போகிறவர்கள் அல்ல திமுகவினர். செய்துகாட்டக் கூடிய அரசு திமுக அரசு. அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி டார்கெட் வைத்து செயல்படுபவர். குறிக்கோள் வைத்து செயல்படுவதோடு, அதனை செய்துகாட்டி சாதனை படைப்பவர் செந்தில் பாலாஜி என்று பாராட்டு தெரிவித்தார்.
முக ஸ்டாலினின் முழக்கம்
தொடர்ந்து, நடக்குமா என்று கேட்பதை நடத்திக் காட்டுவதும், சாத்தியமா என்று கேட்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா என்று கேட்பதை முடித்து காட்டுவதும் திமுகவின் ஆட்சி. இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 1989ம் ஆண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சி நடக்கவில்லை. அது பெயருக்கு இருந்தது. ஆனால் சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என்பது தான் ஸ்டாலின் முழக்கம் என்று தெரிவித்தார்.
விலைவாசி குறைவு
தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேற்றம் கண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இலவச மின்சாரத்தால் உணவுப்பொருள் உற்பத்தி அதிகரித்துள்ளது. உணவுப்பொருள் உற்பத்தி அதிகரிப்பால் மற்ற மாநிலங்களை விட உணவு பொருள் விலை குறைவாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது. பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. பணவீக்கம் குறைந்துள்ளது.
கட்டணமில்லா பேருந்து வசதி
கட்டணமில்லா பேருந்து வசதி அளிக்கப்பட்டுள்ளதால் பெண்களின் பொருளாதார வலிமை அதிகரித்துள்ளது. பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் நிலையானதாக உள்ளது. இதுவே திமுக வழங்கும் பொற்கால ஆட்சியின் அடையாளங்கள். மக்களுக்கான சேவையே மகத்தான சேவை என்பதால், மழை நேரங்களிலும் இயற்கை இடர்பாடுகளிலும் தன்னலமின்றி செயல்படும் மின்வாரிய தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.