3வது நாளாக ரெய்டு.. அமைச்சர் செந்தில்பாலாஜி நண்பர் வீட்டில் காலையிலேயே வேட்டையை ஆரம்பித்த அதிகாரிகள்
கரூர் : அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவரது நண்பர்கள், நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் வீட்டில் 3வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்காக கரூரின் பல்வேறு பகுதிகளுக்கு குழுக்களாக பிரிந்து சென்றனர். கரூர் நகர பகுதி கோவை சாலை ராயனூர், மண்மங்கலம், காந்திகிராமம் போன்ற பல பகுதிகளில் சோதனை இடுவதற்காக வருமான வரித்துறையினர் சென்றனர்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு அமைந்துள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சோதனைக்காக வருமான வரித்துறையினர் வந்தனர். இந்த தகவலைக் கேள்விப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சம்பவ இடத்திற்கு வந்து,சோதனை நடத்த வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை அலுவலர்கள் வந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
தொடர்ந்து, பதட்டமான சூழ்நிலை நிலவியதால், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் சென்றனர். வருமான வரித் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்து, நான்கு அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் மாலையில் அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. இதற்கிடையே மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். சுமார் 150 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடக்கும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்துள்ளனர்.
நள்ளிரவில் ரெய்டை முடித்துவிட்டு ஓய்வுக்கு சென்ற ஐடி அதிகாரிகள், மீண்டும் இரண்டாவது நாளாக நேற்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடைபெறும் இடங்களில் சிஆர்பிஎஃப் போலீசார் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். தொடர்ந்து மீண்டும் மூன்றாவது நாளாக இன்று பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையில் உள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்த் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications