"ஷாக்.." ஃபேன் சுவிட்ச் போட போன சிறுவன்! "ஒரே அலறல்" காப்பாற்ற சென்ற தாத்தாவும் பரிதாபமாக உயிரிழப்பு
கரூர்: சாதாரணமாக சுவிட்ச் போட சென்ற சிறுவன் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதில் துயரம் என்னவென்றால் சிறுவனைக் காப்பாற்ற அவனது தாத்தா முயன்றுள்ளார். இருப்பினும், அவரையும் மின்சாரம் தாக்கிய நிலையில், அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவரது வாழ்க்கை எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்குமே தெரியாது. நல்ல உடல்நிலையுடன் இருக்கும் நபர் கூட ஒரே நொடியில் உயிரிழக்கும் சம்பவங்களும் கூட இங்கே நடந்துள்ளன. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் கரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

சிறுவன்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமம் தான் நடுப்பட்டி. சின்ன கிரமமான இங்கு வசித்து வருபவர் தான் சீனிவாசன்.. 67 வயதான அவர், தனது மகன் தேவராஜ் என்பவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தேவராஜ் மற்றும் அவரது மனைவி அங்கு விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த தம்பதியின் மகன் தான் திருமுருகன்.. 15 வயதான திருமுருகன் உடையாபட்டி அடுத்துள்ள உள்ள தனியார்ப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருமுருகன் பள்ளி செல்லவில்லை. வீட்டிலேயே இருந்துள்ளார். இன்று காலை வீட்டில் இருந்த சுவிட்ச்சை திருமுருகன் ஆன் செய்ய முயன்றுள்ளார்.
மின்சாரம் தாக்கியது: அந்த சுவிட்ச் பல ஆண்டுகள் பழமையானதாகும். இதனால் சுவிட்சில் மின்சாரம் கசிவு இருந்ததுள்ளது. இருப்பினும், இதை அறியாத திருமுருகன், சுவிட்ச்சை போட்டுள்ளான். இதனால் திருமுருகன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. திடீரென மின்சாரம் பாய்ந்ததால் சிறுவன் அலறி துடித்துள்ளான். இதைப் பார்த்துப் பதறிய தாத்தா சீனிவாசன் சிறுவனைக் காப்பாற்ற முயன்று இருக்கிறார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதனால் இருவருமே அடுத்தடுத்து சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கே ஓடி வந்துள்ளனர். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுக் கிடந்த இருவரையும் அப்பகுதி மக்கள் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.
உயிரிழப்பு: அவர்களைப் பரிசோதித்த டாக்டர் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். இந்தச் சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
உயிரிழந்த சீனிவாசன், திருமுருகன் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டில் மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவனம் மக்களே: வீட்டில் பழைய காலத்து சுவிட்ச் போர்ட் இருந்தால் அதை அலட்சியமாக விடாமல் எலக்ட்ரிஷனை கொண்டு செக் செய்து கொள்ளுங்கள்.. சீக்கிரம் பருவமழை தொடங்கும் நிலையில், சுவிட்ச் போர்ட் உள்ளிட்ட மின்சார சாதனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.. இல்லை என்றால் பருவ மழைக் காலத்தில் அவை பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications