முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில்.. அதிமுகவில் சேர்ந்தார் திமுக சின்னச்சாமி!
கரூர்: கரூர் முன்னாள் எம்பியும், திமுக விவசாயிகள் அணி செயலாளருமான சின்னச்சாமி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அவருடன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பகவான் பரமேஸ்வரன் உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.

தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். கரூரில் போட்டியிடும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது, அதிமுகவிலிருந்து அமமுகவுக்குப் போய் பின்னர் திமுகவுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்துப் பேசினார்.
முதல்வர் கூறுகையில், ஐந்து கட்சி மாறியவர் செந்தில் பாலாஜி. இதுபோன்ற போலியானவரை பார்த்து நம்பி விட வேண்டாம். செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர் என்று கூறிவிட்டு தற்போது அவருக்கே ஸ்டாலின் வாக்கு கேட்கிறார். தமிழக மக்கள் தங்களது சொத்துகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றால் அ.தி.மு.கவுக்கு வாக்களிங்க என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அப்போது கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வின்போதுதான் கரூர் திமுகவின் முக்கிய நபராக விளங்கிய தி.மு.க விவசாய அணி செயலாளர் ம. சின்னசாமி மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி பகவான் பரமேஸ்வரன் தலைமையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர்.
தான் திமுகவில் புறக்கணிக்கப்பட்டதால் அதிலிருந்து விலகி அதிமுகவில் இணைவதாக கரூர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார் சின்னச்சாமி. இந்த நிலையில் தற்போது அதிமுகவில் அவர் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications