திமுகவுடன் மோதல்.. அதிமுக மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு அடுத்த சிக்கல்..பாய்ந்தது புதுவழக்கு
கரூர்: கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தொடர்பான தேர்தலில் திமுகவினர், அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் அதிமுகவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய நிலையில் மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த எம்எஸ் கண்ணதாசன், துணை தலைவராக அதிமுகவின் தானேஷ் என்கிற முத்துகுமார் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இதில் தானேஷ் சட்டசபை தேர்தலின்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

மாவட்ட ஊராட்சி துணை தலைவர்
இதற்கிடையே தானேஷ் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக இருந்த 8 வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுகவின் கண்ணையன் வெற்றி பெற்றார். மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ள நிலையில் திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்த நிலையில் அதிமுகவின் பலம் 8 ஆக குறைந்தது. இதற்கிடையே அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 2 பேர் திமுகவில் இணைந்தனர். இதனால் திமுகவின் பலம் என்பது 6 ஆக அதிகரித்ததோடு, அதிமுகவின் பலம் 6 ஆக சரிந்தது.

பதவியை கைப்பற்றுவதில் பிரச்சனை
இதனால் இருகட்சியினர் இடையே மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவியை கைப்பற்றுவதில் பிரச்சனை இருந்தது. இதனால் தொடர்ந்து துணை தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை நடத்தவும், வாக்குகளை எண்ண உத்தரவிட்டது. அதேவேளையில் முடிவை அறிவிக்காமல் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் கார் உடைப்பு
இந்நிலையில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்விஜயபாஸ்கரின் கார் கண்ணாடியை வேடசந்தூர் அருகே மர்மநபர்கள் உடைத்தனர். மேலும் அதிமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருவிகவை கடத்தி சென்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக கரூர் கலெக்டர், எஸ்பியிடம் தேர்தலை ஒத்திவைக்க மனு அளிக்கப்பட்டது. இது ஏற்கப்படவில்லை. இதற்கிடையே திமுக, அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க தயாராக இருந்த வேளையில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணைமேயர் சரவணன் உள்ளிட்டவர்கள் உள்ளே செல்ல அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்பட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மோதல்-அதிமுகவினர் மீது வழக்கு
திமுக, அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்காரணமாக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கள் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தான் அனுமதியின்றி கூடியது, அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

11 பேர் ஓட்டளிப்பு
இருப்பினும் கூட நேற்று களேபரங்களுக்கு மத்தியில் கரூர் மாவட்ட ஊராட்சி துணை தலைவருக்கான தேர்தல் நடந்து முடிந்தது. திமுக சார்பில் தேன்மொழியும், அதிமுக சார்பில் ரமேஷ் போட்டியிட்ட நிலையில் 11 பேர் ஓட்டளித்தனர். கடத்தப்பட்டதாக கூறப்படும் திருவிக மட்டும் ஒட்டளிக்கவில்லை. இதையடுத்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் அறிவுரைப்படி முடிவுகள் மட்டும் வெளியிடப்படவில்லை. இதுபற்றிய அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications