தேவை இல்லாமல் போட்டால் நல்லா இருக்காது! கரூர் திமுக நிர்வாகியின் மிரட்டல் -உருட்டல்! பின்னணி என்ன?
கரூர்: கரூரில் சாக்கடை தண்ணீரில் கான்கிரீட் கலவையை கொட்டிய அவலம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் ஒருவரை செய்தி வெளியிட்டால் நல்லா இருக்காது என மிரட்டல் விடுத்திருக்கிறார் கரூர் திமுக பிரமுகர் மாரப்பன்.
Recommended Video
இதுமட்டும் அல்லாமல் கரூர் மாநகராட்சி 1-வது வார்டில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பொதுமக்களையும் டிவிகாரன் கிட்ட என்ன சொல்றீங்க நீங்க என அதட்டும் தொணியில் கேட்கிறார்.
செய்தியாளரிடம் சண்டியர் தனம் செய்த மாரப்பனை கரூர் மேயர் மற்றும் மற்ற திமுக நிர்வாகிகள் சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

கரூர் மாநகராட்சி
கரூர் மாநகராட்சி 1-வது வார்டுக்குட்பட்ட கே.ஏ.நகரில் கழிவு நீரை அகற்றாமலேயே அதன் மீது கான்கிரீட் கலவையை கொட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியதாகவும் உரிய நபர்களை அழைத்து அவர் டோஸ் விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நிகழ்விடத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் பேட்டி எடுக்கச் சென்ற செய்தியாளர் ஒருவரை, கரூர் திமுக நிர்வாகி மாரப்பன் பகிரங்கமாக மிரட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்லா இருக்காது
''தேவையில்லாம் செய்தி போட்டால் நல்லா இருக்காது, பார்த்துகங்க'' என மிரட்டும் தொணியில் பேசும் மாரப்பன், பேட்டி அளித்த பொதுமக்களிடமும் ''தேவையில்லாதை எதுக்கு பேசுறீங்க'' என ஏசினார். மேலும், தனது செல்போனை எடுத்துப் பார்த்து யாரிடமோ பேசுவது போல் அதை தூக்கி அடிக்கடி காதில் வைப்பதுமாக அலட்டல் செய்திருக்கிறார் மாரப்பன். கடந்த 10 ஆண்டுகாலம் மிக மிக கடுமையான உழைப்பை செலுத்தி திமுக ஆட்சியை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

கழிவுநீர் கால்வாய்
ஆனால் மாரப்பன் போன்ற நபர்களால் ஆட்சி மீதான நல்ல பிம்பமே சிதைந்துவிடும் அபாயம் இருக்கிறது. இதனிடையே கரூரில் செய்தியாளரிடம் அட்ராசிட்டி செய்த இவரை, சக திமுக நிர்வாகிகளும், கரூர் மேயரும் சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றனர். கழிவுநீர் கால்வாயில் கிடந்த குப்பை உள்ளிட்ட அடசல்களை நீக்கிவிட்டு கான்கிரீட் கலவையை கொட்டியிருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.

செந்தில் பாலாஜி
கரூரை பொறுத்தவரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊர் என்பதால் அவரும் இது குறித்து கவனத்தில் கொண்டு இதற்கு காரணமான நபர்களுக்கு டோஸ் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தலை சும்மா இருந்தாலும் வால் சும்மா இருக்காது என்பதற்கேற்ப எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறு, ஒட்டுமொத்த கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை கட்சித் தலைமை முதலில் பாடம் எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications