ஈரோடு கிழக்கில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ரூ 1 கோடி பரிசு! விண்ணப்பிக்க கடைசி நாள்! கரூர் போஸ்டர்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ரூ 1 கோடி பரிசு தரப்படும் என கரூரில் போஸ்டர்
கரூர்: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் அதிகாரிக்கு ரூ 1 கோடி பரிசு தரப்படும் என கரூரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த தொகுதியில் திமுக அமைச்சர்கள் முகாமிட்டுள்ளார்கள். அது போல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

நாம் தமிழர் சீமான்
மேலும் நாம் தமிழர் சீமான், தேமுதிகவின் விஜயபிரபாகரன், பிரேமலதா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்திருந்தனர். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களை கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அது போல் ஒரு இடத்தில் மக்களை பிற கட்சிகள் சந்திக்கவிடாமல் ஆடு,மாடுகளை போல் அடைத்துவைத்து மூன்று வேளையும் கறி சோறு போட்டு பணம் கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

வெள்ளி கொலுசு
தேர்தல் தேதி நெருங்க நெருங்க புகார்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து தேர்தல் ஆணையம் தீவிர ஆய்வில் உள்ளதாக தெரிகிறது. இந்தத் தேர்தலில் பட்டுப்புடவை, வெள்ளி கொலுசு, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், பணம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் எலுமிச்சை பழத்தை வைத்து சில அரசியல் கட்சிகள் சத்தியம் வாங்கிக் கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

பரிசு பொருட்கள்
இந்தப் பரிசு பொருட்கள் விநியோகம் குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மாறி மாறி புகார் கூறி வருகின்றன. தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூட தேமுதிக வலியுறுத்தியது. இந்த நிலையில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஈரோட்டில் போஸ்டர்
இந்த நிலையில் ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்று வரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ 1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கரூரில் போஸ்டர்
இந்த போஸ்டர் கரூரில் ஒட்டப்பட்டுள்ளது. பரிசு மற்றும் பாராட்டு விழாவானது கரூரில் 27 ஆம் தேதி நடைபெறும். இந்த பரிசுக்காக விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி! இந்த போஸ்டரில் ஒருவரின் புகைப்படம் உள்ளது. இப்படிக்கு எனும் இடத்தில் நானும் தமிழர் ராஜேஸ் கண்ணன், கரூர் என ஒட்டப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது. பொதுமக்களையும் கவர்ந்து வருகிறது.

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர்
ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பதை அறிவித்துள்ளார். இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications