கரூரில் சம்பவ இடத்தில் சிதறிக் கிடந்த செருப்புகள்.. 5 நாட்களுக்கு பிறகு அகற்றிய ஊழியர்கள்!
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் விட்டுச் சென்ற செருப்புகள் சம்பவ இடத்தில் குவியலாகக் காணப்பட்ட நிலையில், மாநகராட்சி ஆணையர் சுதா உத்தரவின் பேரில், அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 5 நாட்கள் கழித்து அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார கூட்டத்தில், நடிகர் விஜய் பேசினார். இந்தக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்த நிலையில், 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் முதல் கட்ட விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. கரூர் துயர சம்பவத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அரசியல் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
கரூர் கூட்டத்தில் விஜய் பேச துவங்கும்போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ்கள் உள்ளே நுழைந்தன. பின்னர் விஜய் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுமாறு மக்களை கேட்டுக்கொண்டு தொடர்ந்து பேச துவங்கினார். அப்போது, விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அதனை தட்டி விட்டனர். அதனை அடுத்து மற்றொரு முறையும் செருப்பு வீசப்பட்டு அது விஜய்யின் பிரச்சார வாகனத்தை தாண்டி சென்று விழுந்தது.
அது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கூட்ட நெரிசலின் போது, உயிர் பிழைத்தால் போதும் என்று பலரும் காலணிகளை விட்டு விட்டு சென்றனர். இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆன நிலையில், சாலைகளில் தவெக கட்சிக் கொடிகள், தவெகவின் கட்சி துண்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான காலணிகள் அகற்றப்படாமல் அப்படியே குவிந்து கிடந்தன.
கரூர் நகர போலீசார் சம்பவ இடத்தை சீல் வைத்து 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மாநகராட்சி ஆணையர் சுதா உத்தரவின் பேரில், அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். மாலை 4 மணியளவில் கரூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், கையுறை அணிந்து, தேங்கிக் கிடந்த காலணிகள், கட்சிக் கொடிகள் மற்றும் கட்சி துண்டுகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications