கரூர் கூட்ட நெரிசல்.. தவெகவினர் மீது வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்.. பின்னணி
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்பட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகராக இருந்து அரசியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள விஜய் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி விஜய் கரூர் வேலுச்சாமி புரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என்று மொத்தம் 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மதியழகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் திடீரென காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக சட்டசபை தேர்தல் நடக்கும்போது நீண்டகாலமாக ஒரு இடத்தில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள், பிற போலீஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி தற்போது தமிழகத்தில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தனது கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 59 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணி இடமாற்றம் செய்தார். அதில் மணிவண்ணன் உள்பட 18 பேருக்கு புதிய பணி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இவர்கள் அனைவரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மணிவண்ணன் உள்பட 18 பேருக்கும் எதற்காக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்? என்பது உடனடியாக தெரியவில்லை. தற்போது கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கெண்டு வருகிறது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதன்பிறகு தவெக தலைவர் விஜயிடம் 2 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் பற்றி சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில் கரூரில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications