கரூர் துயரம்.. 2 ஆயிரம் செருப்புகள் கிடந்தன.. ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் இல்லை.. செந்தில் பாலாஜி!
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தவெக பிரச்சார கூட்டம் நடந்த இடத்தில் 2 ஆயிரம் செருப்புகள் இருந்தன.. ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் பெருந்துயரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வைக்கப்பட்டு வருகின்றன. தவெக கூட்டத்தில் கத்தியால் சிலர் மீது கீறல் போடப்பட்டதாகவும், ஜெனரேட்டர் அடித்து திமுகவினர் உடைத்ததாகவும், விஜய் மீது திமுகவினர் செருப்பு வீசியதாகவும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

அதேபோல் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் செந்தில் பாலாஜி எப்படி அமராவதி மருத்துவமனைக்கு உடனடியாக வந்தார் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் திமுக அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக கேட்டது 3 இடங்கள்.. லைட் ஹவுஸ் கார்னர்.. அதே மாதிரி உழவர் சந்தை.. இந்த இரு இடங்களிலும் எவ்வளவு பேர் நிற்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த இடங்களை விட வேலுச்சாமிபுரத்தில் எவ்வளவு பேர் நிற்க முடியும் என்பதை பாருங்கள்.. வேலுச்சாமிபுரத்தில் 2 ஆயிரம் செருப்புகள் கிடந்தன. ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லை. இதில் இருந்தே தெரிகிறது.. மக்களுக்கு குடிநீரோ, பிஸ்கட் பாக்கெட்டுகளோ வழங்கப்படவில்லை. விஜய் மாலை 4 மணியளவில் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்திருந்தாலே, அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது.
விஜய் பேச தொடங்குவதற்கு முன்பாகவே அங்கு நிலைமை மோசமாகிவிட்டது. அவர் கவனத்தை திருப்பவே செருப்பை வீசி இருக்கின்றனர். செருப்பு வீசிய அடுத்த சில நிமிடத்திலேயே விஜய் அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வீசி இருக்கிறார். அதேபோல் கூட்ட நெரிசல் அதிகமாகும் போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடைத்து உள்ளே விழத் தொடங்கினர். இதனால் ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்டது.
அப்போதும் கூட சாலை விளக்குகள் ஆஃப் செய்யப்படவில்லை. தவெக சார்பாக அமைக்கப்பட்ட விளக்குகள் மட்டுமே அணைக்கப்பட்டது. செய்தி சேனல்கள் லைவ் செய்த வீடியோவிலேயே எல்லாம் தெளிவாக இருக்கின்றது. எங்கும் மின் விநியோகம் தடை செய்யப்படவில்லை. கரூரில் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு 500 மீட்டருக்கு முன்பாகவே விஜய் பேருந்தின் விளக்கை அணைத்து, ஸ்க்ரீன் போட்டுவிட்டார்.
அவரை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் அங்கு குவிந்துவிட்டனர். இந்தக் கூட்டம் எல்லாம் பிரச்சார பகுதிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்தாரா என்பதற்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும். அதேபோல் மருத்துவமனைக்கு எப்படி விரைவாக சென்றீர்கள் என்று கேட்கிறார்கள்.
இதே திமுக அலுவலகத்தில் தான் நான் இருந்தேன். இங்கிருந்து மருத்துவமனைக்கு செல்ல எவ்வளவு நேரம் ஆகப் போகிறது? நான் 7.48 மணிக்கு அமராவதி அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அதிமுக மாவட்டச் செயலாளர் 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்துவிட்டார். எங்களது இடத்தில் தவெகவினர் இருந்து உதவிகளை செய்திருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications