"மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது" - வைரமுத்து இரங்கல்
கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது என்று வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வெள்ளிக்கிழமை இரவு முதல், சனிக்கிழமை காலை முதலே என விஜயைக் காண்பதற்காக ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர். பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் பகுதியில் திரண்டிருந்தனர்.

ஒருகட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. விஜய் பேசப் பேசவே பலரும் மயக்கமடைந்தனர். இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கல், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவிஞரும், பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"தாங்க முடியவில்லை;
இரவு என்னால்
தூங்க முடியவில்லை
மரணத்தின் படையெடுப்பால்
கரூர் கருப்பூர் ஆகிவிட்டது
அந்த மரணங்களுக்கு
முன்னும் பின்னுமான
மனிதத் துயரங்கள்
கற்பனையில் வந்து வந்து
கலங்க வைக்கின்றன
பாமரத் தமிழர்களுக்கு
இப்படி ஒரு பயங்கரமா?
இந்த வகையில்
இதுவே கடைசித் துயரமாக
இருக்கட்டும்
ஒவ்வோர் உயிருக்கும்
என் அஞ்சலி
ஒவ்வொரு குடும்பத்துக்கும்
ஆழ்ந்த இரங்கல்
இனி இப்படி நிகழாமல்
பார்த்துக் கொள்வதே
இந்த நீண்ட துயரத்துக்கு
நிரந்தர நிவாரணம்
ஆடும் உடம்பு
அடங்குவதற்கு நாளாகும்". என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications