தவெக தலைவர் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் ரத்து.. கரூர் விரைகிறாரா?
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், அவரின் அடுத்த வார சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உட்பட 39 பேர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூரில் கோர சம்பவம் நடந்திருக்கும் நிலையில், நேற்றிரவு கரூரில் இருந்து திருச்சி வந்த விஜய், உடனடியாக தனி விமானம் மூலமாக சென்னை திரும்பினார்.

விஜய் தனது வீட்டிற்கு சென்ற பின், கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் பதிவை வெளியிட்டார். இதனிடையே கரூர் கொடூர சம்பவம் தொடர்பாக முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர்.
இதனிடையே தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டது. 5 பேர் கொண்ட துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் கரூர் துயரம் காரணமாக விஜய்யின் அடுத்த வார பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
விஜய் முதற்கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 மாவட்டங்களுக்கு பயணித்து மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதற்கட்ட பிரச்சாரத்தின் போதே 3வது மாவட்டத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் 2வது கட்ட சுற்றுப்பயணம் முன்பாகவே, பிரச்சார அட்டவணை மாற்றப்பட்டது. இனி ஒவ்வொரு வாரமும் 2 மாவட்டங்களுக்கு பயணிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய்யின் 4வது கட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதனால் விரைவில் தவெக தலைவர் விஜய் கரூர் விரைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப உயிரிழந்தவர்களுக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications