தலித்துகளுக்கு அனுமதி மறுப்பு- விஸ்வரூபம் எடுத்த கரூர் கோவில் நுழைவு விவகாரம்- இரவிலும் போராட்டம்!
கரூர்: கரூர் அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோவிலில் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று இரவும் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் வீரணம்பட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் தரகம்பட்டியை அடுத்து இருப்பது வீரணம்பட்டி. இங்குள்ள காளியம்மன் கோவில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் கடந்த 7-ந் தேதி தலித் இளைஞர் ஒருவர் வழிபாடு நடத்தினார். இதற்கு வீரணம்பட்டியை சேர்ந்த ஒரு ஜாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் தலித் இளைஞரை கடுமையாகத் தாக்கி கோவிலை விட்டு வெளியேற்றினர். இதனையடுத்து இருதரப்பினரிடையே மோதல் நிகழ்ந்தது.
இரு ஜாதியினரிடையே மோதல் நிகழ்ந்ததால் அரசு அதிகாரிகள் முதலில் கோவிலைப் பூட்டு போட்டி பூட்டினர். இதன்பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பும் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் நேற்று கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே ஒரு ஜாதியினர் கோவிலுக்குள் நுழைந்து கரகத்தை கிணற்றில் கரைத்தனர். இதனால் மீண்டும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து கோவிலை இழுத்துப் பூட்டி கோட்டாட்சியர் புஷ்பாதேவி சீல் வைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒரு ஜாதியினர் கோட்டாட்சியர் புஷ்பாதேவியை 3 மணிநேரம் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து கோட்டாட்சியரை மீட்டு சென்றனர். அப்போது கோட்டாட்சியரின் கார் மோதி சிறுமியின் கால் முறிந்து. இது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது.
வீரணம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் நேற்று 2-வது நாளாக திருச்சி- பாளையம் பிரதான சாலை, விராலிப் பட்டி பிரிவு ஆகிய 2 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்த போதும் மறியல் போராட்டமும் நடந்தது. இப்பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு காணப்படவில்லை. இதனால் நேற்று இரவும் வீரணம்பட்டி சுற்றுவட்டார மக்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் வீரணம்பட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications