மோசடி புகாரில் அதிமுக முன்னாள் சேர்மன் கைது.. காலை நடைபயிற்சியின்போதே தூக்கியது போலீஸ்!
கரூர்: நிலம் வாங்கி தருவதாகக் கூறி வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக கரூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் பாலமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்டார். நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (52). அதிமுக கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவரான இவர் தற்போது அதிமுகவில் கரூர் மாவட்ட விவசாய அணி செயலாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், பாலமுருகன், கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகுநாதன் என்பவருக்கு நிலம் வாங்கித் தருவதாக ரூ.96 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு காலக்கெடு முடிந்த பிறகும் நிலம் வாங்கிக் கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் ரகுநாதன் அளித்திருந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று காலை, அதிமுக நிர்வாகி பாலமுருகனை கைது செய்தனர். வாங்கல் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாலமுருகனை வாங்கல் மற்றும் குற்றப்பிரிவு போலீசர் கைது செய்தனர்.
அதன் பின்னர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாலமுருகனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாவட்ட அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தகவலறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர், கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு சென்று பாலமுருகனைச் சந்தித்து விட்டுத் திரும்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "அதிமுக விவசாய அணி செயலாளர் பாலமுருகனை நில விவகார கொடுக்கல், வாங்கலில் கைது செய்துள்ளனர். நடைப்பயிற்சி சென்றவரைக் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை சென்று சந்தித்து வந்தோம். நடைப்பயிற்சி செல்பவர்களைக் கைது செய்வதுதான் திமுக அரசின் வழக்கமாக உள்ளது." எனக் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications