அதிமுக கவுன்சிலர்கள் கடத்தலா?.. அதுவும் நான் கடத்தியதாக என்னை கைது செய்ய ஆயத்தம்?.. மாஜி விளக்கம்
கரூர்: கரூரில் அதிமுக கவுன்சிலர்களை கடத்தியதாக எழுந்த புகாரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மறுத்துள்ளார்.
கரூரில் கடந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி மாவட்ட ஊராட்சி மன்றத் துறைத் தலைவர் தேர்தல் நடந்தது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலில் அதிமுக 8, திமுக 4 என்ற நிலையில் உறுப்பினர்கள் இருந்தனர்.
இதனால் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனை மனதில் வைத்து தேர்தல் அதிகாரியாக வந்த மாவட்ட திட்ட அலுவலர் தேர்தலை ஒத்திவைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆட்சேபம்
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அதன்பிறகு 4 முறை தேர்தல் நடத்த திட்டமிட்டும் பல்வேறு காரணங்களை சொல்லி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதி வாய்ப்பாக நேற்றைய தினம் தேர்தல் நடந்தது.

இரு கவுன்சிலர்களுக்கு மிரட்டல்
இந்த நிலையில் இரு அதிமுக கவுன்சிலர்கள் மிரட்டுக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மாவட்ட கவுன்சிலில் அதிமுக, திமுகவின் பலம் தலா 6 என சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் 6 அதிமுக கவுன்சிலர்களையும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கடத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

6 கவுன்சிலர்கள்
இந்த தகவலை முன்னாள் அமைச்சர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் அதிமுகவின் 6 கவுன்சிலர்களையும் நான் கடத்திவிட்டதாக என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீஸார் என்னை கைது செய்யவிருந்ததாகவும் என சில வட்டாரங்கள் மூலம் தகவல்கள் கிடைத்தன.

ஆட்சியரிடம் புகார்
இதனால் சம்பந்தப்பட்ட 6 அதிமுக உறுப்பினர்கள் புகார் மனு அளிக்க வந்தேன். நீங்களே பாருங்கள் இவர்கள்தான் அந்த 6 கவுன்சிலர்கள். கரூர் மாவட்டத்தில் அராஜகம் நடந்து வருகிறது. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். தேர்தல் நியாயமாக நடக்கும் என்றார்.

ஏஎஸ்பியிடமும் புகார் மனு
அது போல் மாவட்ட எஸ்பியையும் சந்திக்க சென்றோம். அவர் பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். அதனால் ஏஎஸ்பி கண்ணனிடம் மனுக்களை கொடுத்துவிட்டு வந்துள்ளோம். அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா 6 கவுன்சிலர்கள் என சமமாக இருப்பதால் குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என தெரிவித்தார்.

அமைச்சர் மீது குற்றச்சாட்டு
கரூர் மாவட்டம் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டம். இதனால் இந்த மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியை அதிமுகவுக்கு செல்ல விட்டு விடக் கூடாது என்பதால் பல மோசடி செயல்களை அவர் செய்வதாகவும் கரூரில் அராஜகம் நடப்பதாகவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் அதிமுகவினரும் குற்றம்சாட்டினர்.












Click it and Unblock the Notifications