கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பிய நபர் தலையை துண்டித்து படுகொலை! கரூர் அருகே கொடூரம்! பழிக்குப் பழி?
கரூர்: நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பியபோது மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவின்போது ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ராமர் என்கிற ராமகிருஷ்ணன் (36), மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்கிற கிளி கார்த்திக் (36) உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களாக ராமர் வேறு மாவட்டத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த வழக்கு விசாரணை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
ஜாமீனில் இருந்த முதல் குற்றவாளியான ராமர், கார்த்திக் ஆகியோர் இந்த வழக்கு விசாரணைக்காக கரூர் நீதிமன்றத்தில் இன்று (பிப்.19ஆம் தேதி) ஆஜராகிவிட்டு இரு சக்கர வாகனத்தில் மதுரை திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அரவக்குறிச்சி அருகேயுள்ள பேரம்பாடி பிரிவு அருகே செல்லும்போது காரில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் ராமர் தலையை வெட்டித் துண்டித்ததோடு, கார்த்திக்கையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து, ராமர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்தவர்களை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2012ஆம் ஆண்டு மதுரையில் நடந்த சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, கொலையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications