செந்தில்பாலாஜி பூரண நலம் பெறணும்! பிரச்சனைகள் தீரணும்! கரூரில் ரத்த தானம் செய்த ஆதரவாளர்கள்!
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவரது ஆதரவாளர்கள் கரூரில் ரத்த தானம் செய்துள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில், இருதய ரத்த குழாயில் முக்கியமான இடங்களில் 3 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. காவேரி மருத்துவமனையில் ஓரிரு நாட்களில் அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது மருத்துவக் குழு கவனித்து வருகிறது.
இதனிடையே செந்தில்பாலாஜி பூரண நலம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடனும் அவருக்குள்ள பிரச்சனைகள் தீர வேண்டும் என்ற வேண்டுதலுடனும் நேர்த்திக்கடன்களை செய்ய ஆரம்பித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அந்த வகையில் கரூரில் உள்ள ரத்த வங்கி ஒன்றுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் ரத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட யார் படமும் இல்லை என்பதும் ஒன் அண்ட் ஒன்லி செந்தில்பாலாஜி படத்தை மட்டுமே அவரது ஆதரவாளர்கள் வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மருத்துவமனையில் இருந்தபோது என்ன பரபரப்பு ஏற்பட்டதோ அதே போன்று ஒரு பரபரப்பை செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
செந்தில்பாலாஜியை மட்டும் முன்னிறுத்தும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை, பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருந்து வருபவர்கள் வெகுவாக ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications