நான் கேட்கிறேன்.. எடப்பாடிக்கு, சேலத்தை தவிர வேறு ஏதாவது ஒரு ஊர் தெரியுமா?.. ஸ்டாலின்
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் காட்டமான கேள்வியை எழுப்பி உள்ளார்.
கரூர்: ஸ்டாலின் என்றைக்காவது கிராமத்திற்கு போனதுண்டா என்று கேட்கும் எடப்பாடிக்கு, சேலத்தைத் தவிர வேறு ஏதாவது ஒரு ஊர் தெரியுமா? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஸ்டாலின் சமீப காலமாக கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். இதில் மக்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு, மனுக்களையும் பெற்று, நிறைய விஷயங்களை பேசி வருகிறார். ஸ்டாலினின் இந்த மக்கள் சந்திப்பை அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
கடந்த 16ம் தேதியன்று சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோதெல்லாம் கிராமத்திற்குச் செல்லாதவர்கள் இப்பொழுது கிராமத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்காக ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.
போகாத கிராமம் இல்லை
இதற்கு ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பதிலளித்துள்ளார். அப்போது "நான் முதன்முதலில் இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அந்த இளைஞர் அணி சார்பில் கிராமப் பகுதியிலிருந்து தான் என்னுடைய அரசியல் பயணத்தை துவங்கினேன். நான் போகாத கிராமங்களே தமிழ்நாட்டில் கிடையாது.
நூல் நிலையங்கள்
நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து ஊராட்சி தலைவர்களையும் ஒருங்கிணைத்து நிர்வாகிகள் அடங்கிய ஒரு மாநாட்டை நடத்தியவன் நான். அதுமட்டுமல்ல... நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நேரத்தில்தான் 12,617 ஊராட்சி பகுதிகளில் நூல் நிலையங்களை உருவாக்கப்பட்டது.
இவன்தான் தளபதி
நான் கேட்கின்றேன், ஸ்டாலின் என்றைக்காவது கிராமத்திற்கு போனது உண்டா என்று கேட்கும் எடப்பாடிக்கு, சேலத்தை தவிர வேறு ஏதாவது ஒரு ஊர் தெரியுமா? இன்னைக்கு நான் எங்கு போனாலும் இவன்தான் ஸ்டாலின், இவன்தான் தளபதி, இவன்தான் கலைஞரின் மகன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்களோடு மக்களாக இருந்திருக்கிறேன்.
முற்றுப்புள்ளி
நான் பெருமை பேசுவதகாக யாரும் நினைத்துவிடக்கூடாது. மக்களோடு மக்களாக பழகி அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால்தான் நான் இதைக் கூறுகின்றேன். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த கிராம சபைக் கூட்டம் நிச்சயமாக பயன்படும்'' என்றார்.