கொரோனா சிகிச்சை பெயரில் பலரை கொன்றவரா? போக்சோவில் சிக்கிய கரூர் ரஜினிகாந்த் மீது பகீர் புகார்கள்
கரூர்: கரூரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர் ரஜினிகாந்த் மீது அடுக்கடுக்கான பகீர் புகார்கள் குவிந்துள்ளன. கொரோனா காலத்தில் சிகிச்சை என்ற பெயரில் பலரை கொன்றதாக எழுத்தாளர் புலியூர் முருகேசன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரங்கமாக புகார் தெரிவித்துள்ளார்.
கரூரில் ஆர்த்தோ மருத்துவமனை என்ற பெயரில் சிகிச்சை அளித்தவர் ரஜினிகாந்த். இவரது மருத்துவமனையில் வேலை பார்த்த பெண் பணிக்கு வரவில்லை.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் பிளஸ் 1 படிக்கும் மகளுக்கு தொலைபேசி செய்து மருத்துவமனைக்கு அழைத்துள்ளார். மருத்துவமனையில் பிளஸ் 1 மாணவிக்கு கொடூரமாக பாலியல் தொல்லை தந்துள்ளார் ரஜினிகாந்த். இதனால் அந்த காம கொடூரன் ரஜினிகாந்திடமிருந்து மாணவி அலறியபடி தப்பி ஓடி வந்து தாயிடம் கூறியிருக்கிறார்.

போக்சோவில் ரஜினிகாந்த்
இதனால் ரஜினிகாந்த் மீது கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் தப்பி ஓடி தலைமறைவானார். அவரை பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அதேநேரத்தில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் ஒரு இடத்தில் ரஜினிகாந்த் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ரஜினிகாந்த் ஒரு போலி டாக்டர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ரஜினிகாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டுபாக்கூர் சிகிச்சை
இந்நிலையில் கரூரை சேர்ந்த எழுத்தாளர் புலியூர் முருகேசன் தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: கரூரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர் ரஜினிகாந்த், ஒரு எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவராகத்தான் தன் தொழிலைத் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டவரின் மோசடிகள் அப்போதே அம்பலமானது. விபத்தொன்றில் சிக்கி, கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காகச் சென்ற புலியூர் நண்பரொருவர் அன்னாரின் மோசடி சிகிச்சையை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தினார். வலது காலில் அடிபட்டுச் சென்றவருக்கு, இடது காலில் மூன்று இடங்களில் எலும்பு துண்டாகியிருக்கிறது என எக்ஸ்ரேவைக் காட்டி பணம் கட்டச் சொன்னால், சும்மா விடுவார்களா! கடைசியில், மோசடியை மூடி மறைக்க இந்த ரஜினிகாந்த் 1 லட்ச ரூபாய் கொடுத்தும், விஷயம் கசிந்து விட்டது.

கொரோனா காலத்தில் உயிர்கள் பறிப்பு
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சையையே அரைகுறையாகச் செய்யும் இவர், கடந்த கொரோனா காலகட்டத்தில் 'கொரோனா புகழ்' மருத்துவராக அவதாரம் எடுத்து பல லட்சங்களைச் சுருட்டினார். அப்படியான நாளில், என் மகனின் நண்பனுடைய தந்தை கொரோனா பாதிப்பால், இந்த நபரிடம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்து போனது கொடும் துயரம். ஐந்து லட்ச ரூபாய் பணம் பறிக்கத் தெரிந்த இவருக்கு, மூச்சுத் திணறலைச் சரி செய்யத் தெரியவில்லை. இதுபோல பல உயிர்களைக் கொன்றவர், இன்று தன் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணின் மகளான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய குற்றத்தில் சிக்கியிருக்கிறார். இவ்வாறு எழுத்தாளர் புலியூர் முருகேசன் பதிவு செய்துள்ளார். இந்த புகார்களையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

கரூர் புலியூர் முருகேசன் பின்னணி
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த புலியூர் முருகேசன், பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு என்கிற சிறுகதைத் தொகுப்பை சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டார். இது ஜாதிய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் புலியூர் முருகேசன் தாக்குதலுக்கும் உள்ளானார். இதனால் கரூரில் இருந்து தஞ்சாவூருக்கு போலீசார் பாதுகாப்புடம் இடம்பெயர்ந்து தற்போது அங்கேயே வசித்து வருகிறார். உடல் ஆயுதம், மூக்குத்தி காசி, படுகைத் தழல், பாக்களத்தம்மா நாவல்களை எழுதியுள்ளார் புலியூர் முருகேசன்.












Click it and Unblock the Notifications