சிக்கலில் மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்? முன்ஜாமீன் கோரிய நிலமோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..
கரூர்: நில மோசடி வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிரான புகார் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்ஆர் விஜயபாஸ்கர் தரப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர். அதிமுகவை சேர்ந்த இவர் முன்னாள் அமைச்சராவார். இந்நிலையில் தான் கடந்த சில ஆண்டுகளாக அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் புதிய சிக்கலில் மாட்டி உள்ளார்.

அதாவது நிலமோசடி வழக்கில் அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் தான் தற்போது அவருக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. மேலும் அந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றுள்ளதால் அவருக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதாவது கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "கரூர் மாவட்டம் வெள்ளியயைணை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மென்ட் மூலம் அவரது சொத்தை கிரையம் செய்து கொடுக்க ஏப்ரல் 6ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சொத்து வெள்ளியணை சார்பதிவக எல்லைக்குட்பட்டது என்பதாலும், சொத்தின் அசல் ஆவணம் சமர்ப்பிக்கப்படாததாலும் சட்டப்படி அந்த ஆவணப் பதிவு நிலுவையில் வைக்கப்பட்டது.
அதன்பிறகு, அசல் ஆவணம் தொலைந்துவிட்டது எனக்கூறி சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட சிஎஸ்ஆர் நகலை ஆவணதாரர் சார்பாக யுவராஜ் மற்றும் பிரவீன் ஆகியோர் அளித்தனர். வெள்ளியணை சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிப்பறிக்கை பெற்று மே 10ம் தேதி மேற்படி சொத்து சட்டப்படி கிரையம் செய்யப்பட்டது. மறுநாள் ஷோபனாவின் தந்தை பிரகாஷ், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனு அளித்தார். நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை தொடர்ந்து கரூர் நகர காவல் நிலையத்தில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே தான் இந்த வழக்கில் மாஜி அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது.
மேலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நில உரிமையாளர் பிரகாஷ், கரூர் நகர காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே எம்ஆர் விஜயபாஸ்கர் சார்பில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில் தான் நிலமோசடி தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications