பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்.. கரூரில் இரவு நேரத்தில் கேட்ட துப்பாக்கி சத்தம்!
கரூர்: கரூரில் பிரபல ரவுடி தமிழழகனை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். தமிழழகனை இரவில் கைது செய்ய முயன்றபோது அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் காலில் சுடப்பட்டுள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னவண்டான் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தமிழழகன். இவர் பென்சில் தமிழழகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.

இந்த சூழலில், கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பயணி ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, தமிழழகன் மற்றும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், மனோஜ் உள்ளிட்ட 4 பேர் அங்கிருந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அந்த பயணி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழழகனின் கூட்டாளிகளாக பிரகாஷ், மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். இதில் தமிழழகன் தப்பி ஓடியதாகக் கூறப்பட்ட நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். அந்த வகையில், பென்சில் தமிழழகனை பிடிக்க நேற்று (ஜுன் 18) இரவு கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பென்சில் தமிழழகனை பிடித்து விசாரணை நடத்தினர். பென்சில் தமிழழகன் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தனது துப்பாக்கியால் தமிழழகனின் காலில் சுட்டு பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காலில் காயமடைந்த ரவுடி தமிழழகன் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications