"முதல்வர் ஸ்டாலின் முழு விளம்பர பிரியராக உள்ளார்!" திமுக அரசை விளாசும் எடப்பாடி பழனிசாமி
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரத்தின் சிலையைத் திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி, திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாகத் தாக்கி பேசினார்.
கரூர் மாவட்டம் வளையபட்டி கிராமத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியான பாப்பா சுந்தரத்தின் திருவுருவ சிலையை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "முன்னாள் அமைச்சர் பாபாசுந்திரன் சிலை திறப்பதில் பாக்கியம் பெற்றுள்ளேன். தான் சார்ந்த பகுதி மக்களுக்குச் சட்டமன்றத்தில் பேசி திட்டங்களைப் பெற்றவர். 1934ஆம் ஆண்டு பிறந்து, நினைவு தெரிந்ததில் இருந்து அதிமுகவில் இருந்துள்ளார். அவர் கடந்த ஆண்டு இயற்கை எய்திவிட்டார். வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு நிறையச் செய்துள்ளார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் பல பதவிகளைப் பெற்றுள்ளார்.

ஜெயலலிதா
அதிமுகவில் பல பதவிகளைப் பெற்று பணியாற்றி கட்சி வளர்ச்சிக்காக பணியாற்றியவர் பாபசுந்திரன். அதிமுகவைப் பொறுத்தவரை, இங்கு மற்ற கட்சிகளைப் போல வாரிசு அரசியல் கிடையாது. சாதாரணமானவர் கூட பெரிய பதவிக்கு வரலாம். இதற்குச் சிறந்த உதாரணம் பாப்பா சுந்தரம். அதிமுக உயிரோட்டம் உள்ள இயக்கம். பிளவு பட்ட இயக்கத்தை ஒருங்கிணைந்த பெருமை ஜெயலலிதாவை சேரும்.

புதிய திட்டங்கள் இல்லை
மக்களுக்காக உழைத்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் தான் சர்வாதிகார போக்கிற்கும், வாரிசு அரசியலுக்கும் முற்றுப் புள்ளி வைத்தனர். அவர்கள் வழியில் நாங்கள் நடக்கிறோம். அதிமுக காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தான் இப்போது முதல்வர் திறந்து கொண்டிருக்கிறார். நாங்கள் அறிவித்த திட்டங்களுக்குப் பூஜை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பதவி ஏற்று 11 மாத காலத்தில் எந்த திட்டமும் இல்லை, எந்த நன்மையும் கிடையாது.

விளாசும் ஈபிஎஸ்
நமது ஆட்சியில் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. ஏழையின் குழந்தைகளும் உள் ஒதுக்கீட்டால் மருத்துவம் படிக்கிறார்கள். நானும் அரசுப் பள்ளியில் படித்தவன். அரசுப் பள்ளியில் படித்த 500 மாணவர்கள் உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்கிறார்கள். காவிரி குண்டாறு திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. உயர் நீதி மன்றம் உத்தரவின் படி காவிரி ஆற்றில் 3 தடுப்பணை கட்ட திட்டம் கொண்டு வந்தோம். ஆனால், இந்த அரசு அதைக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்
ஏழையின் நெல் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. அம்மா மினி கிளினிக் திட்டம் கொண்டு வந்தோம் அதையும் மூடி விட்டார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் விளம்பர பிரியராக உள்ளார்" என்று கடுமையாகத் தாக்கி பேசினார்.












Click it and Unblock the Notifications