மனிதாபிமானம் இல்லாமல் காவல்துறையினர் நடந்து கொள்கின்றனர்... செந்தில் பாலாஜி ஆவேசம்
கரூர்: மனிதாபிமானமில்லாமல் காவல்துறையினர் நடக்கின்றனர் என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புகார் தெரிவித்துள்ளார்.
சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. அரவக்குறிச்சியில் 250 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அங்கு 63 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது என்றும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் கூறினார். மேலும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
அதே நேரம், அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திமுகவினர் முயற்சி செய்து வருகின்றனர் என்று அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் குற்றச்சாட்டு உள்ளார். இருகட்சியினரும் மாறி, மாறி புகார் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதி தோட்டக்குறிச்சியில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் திரண்டிருந்த தொண்டர்களை கலைந்து போக போலீஸ் வலியுறுத்தினர். ஆனால், கலைந்து செல்ல மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
அரவக்குறிச்சி அருகே சௌந்திராபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் அகரவரிசைப்படி வைக்காததால் வாக்காளர்கள் வாக்களிப்பதில் குழப்பம் ஏற்பட்டதாக கூறி பூத் ஏஜெண்டுகள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பேருந்துகளை நிறுத்தி போலீசார் விசாரணை; பேருந்துகளில் வந்த பயணிகளிடம் வாக்காளர் அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications