கரண்ட் கட்டால் காண்டாகும் கரூர்..வேப்பமரத்தடியில் கர்ப்பிணிகள்! கை குழந்தையுடன் காய்ந்த தாய்மார்கள்!
கரூர்: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட 3 மணி நேர மின் தடையால் கர்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் தாய்மார்கள் மரத்தடியில் தவித்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் மின்நுகா்வு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது.

குறிப்பாக தொழில் நகரங்களில் அதிக அளவுக்கு மோட்டார் இயந்திரங்களை இயக்குவது, வீடுகளில் ஏசி, குளிர்சாதனப் பெட்டி பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றால் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது
கரூரிலும் மின் தடை: இந்நிலையில் கரூரிலும் மின் தடை புகார் இருந்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஏற்பட்ட மின் தடையால் நோயாளிகள், கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. இந்த மருத்துவமனையில் குளித்தலையை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் முதியோர்கள் மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மருத்துவமனையில் அவதி: குறிப்பாக இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு தாய் சேய் மட்டும் சிசு பராமரிப்பு மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இடையிடையே அறிவிக்கப்படாத மின் தடையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின்சாரம் இல்லாததால் கர்ப்பிணி தாய்மார்கள் அவசர சிகிச்சை நோயாளிகள் கடுமையான வெயிலால் பெட்டில் இருக்க முடியாமல் மரத்தடியில் இருக்கும் அவல நிலை இருந்து வருகிறது.

கடும் அவதி: மேலும் குழந்தை பிறந்த தாய்மார்கள் அவர்களின் உறவினர்கள் குழந்தையை அறையில் வைத்திருக்க முடியாமல் மரத்தடியில் விசிறி மூலம் குழந்தையை பாதுகாத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் கடுமையான வெயில் காலங்களை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனையில் மின் துண்டிக்காத வகையில் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தடையில்லா மின்சாரம்: இந்த மருத்துவமனையில் மிகப்பெரிய ஜெனரேட்டர் வசதி இருந்தும் நோயாளிகளுக்கு தடையில்லா மின்சார வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. தாய்மார்கள், சிசு குழந்தைகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து தடையில்லா மின்சார வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும் முன் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications