நான் ஆணையிட்டால்..புதுவை தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழக தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன்..சீமான் பேச்சு
கரூர்: கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது, தவெக மாநாட்டுக்கு கர்ப்பிணிகள், வயதானவர்கள் வர வேண்டாம் என கூறியது அக்கறையில் சொன்னது, அதை வரவேற்கிறேன்.. விஜய்க்கு என் பாராட்டுக்கள் என கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலும் தான் முதலமைச்சரானால் புதுச்சேரி தமிழ் தாய் வாழ்த்தை, தமிழ்நாடு தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன் என கூறியுள்ளார்.
கரூர் மாநகரை ஒட்டிய வெண்ணைமலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான கோவில் நிலங்களை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, மீட்கும் நடவடிக்கைகளில் அறநிலையத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று கரூர் நகருக்கு வருகை தந்தார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் நகரில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள சீமானை சந்திக்க வெண்ணைமலையில் இருந்து பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நடந்து செல்ல முயன்றனர்.
அப்போது நடந்து சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்ததால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த சீமான் வெளியே வந்து பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி நிலப் பிரச்சனை தொடர்பான அறநிலையத்துறை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, பொதுமக்களுக்கு தனது ஆதரவை தெரிவித்து பேசினார்.
அதனை தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," சமூக நீதி பேசும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவி செழியனுக்கு ஏன் அமைச்சரவையில் இடம் தரவில்லை. இரண்டு முறை தோல்வி அடைந்த ஒருவர் மத்திய இணை அமைச்சர் ஆகும் போது, மண்ணின் மகன் திருமாவளவன் நாட்டின் முதல்வர் ஆக தகுதியில்லையா? அவர் ஆக கூடாதா என்ன? அந்த உணர்வு மற்றும் உரிமையில் நான் சொல்கிறேன்.
நாங்கள் வென்று வரும்போது நீங்கள் அதனை கேட்க வேண்டியதே இல்லை. தமிழர் கழகம் என்று இருந்தால், திராவிடர்கள், பெரியார் பதவியேற்க முடியாது என்பதால், திராவிட கழகம் என்று மாற்றினார்கள். இதனை யாரும் மறுப்பதற்கும் இல்லை, மறப்பதற்கும் இல்லை. ஆரியம்போல் என்ற சொல்லை ஏன் நீக்கினார்கள் என்றால், அதுக்கு ஒரு விளக்கம் சொல்கிறார்கள் .
ஆரியர்கள் மனது புண்படும் என்று சொல்கிறார்கள். திராவிடம் என்ற சொல் வந்தது காரணமாக தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக கருணாநிதி வைத்தார் என்று குற்றச்சாட்டு வைக்கிறேன். இல்லையென்றால் வந்து இருக்காது. பாரதிதாசன் எழுதிய, புதுச்சேரி வாழ்த்து எவ்வளவு அழகாக இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் அதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். தமிழ்நாட்டிலும், புதுச்சேரிலும் ஒரே பாட்டாக இருக்கட்டும். பாட்டு சிறப்பாக இருக்கிறது. இதை விட வேற என்ன வேணும்
கருணாநிதி பேரன் என்பதை தவிர உதயநிதிக்கு என்ன தகுதி உள்ளது. பிறப்பினால் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியுமென்றால் அதுதான் மிகப்பெரிய சனாதனம். நான் களத்தில் வேகமாக ஓடுபவன். விஜய் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பவர். மத்தியில் கூட்டணியில் ஆட்சியில் இருக்கும் பொழுது மந்திரி சபையில் இடம் கேட்கும் திமுக. மாநிலத்தில் கூட்டணி மந்திரி சபை அமைக்க பயப்படுகிறது.
20 மாநிலத்தில் உள்ள முதல்வர்களை சந்திக்காத பிரதமர், தமிழக முதல்வரையும், துணை முதல்வரையும் அடிக்கடி சந்திக்கிறார். திமுகவுடன், பாஜக நெருக்கத்தில்தான் உள்ளது. தவெக மாநாட்டுக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் வர வேண்டாம் என விஜய் கூறியது அக்கறையில் சொன்னது. அதை வரவேற்கிறேன், விஜய்க்கு என் பாராட்டுக்கள்.
டாஸ்மாக் கடைகளில் 3500 கவுன்டர்கள் புதிதாக திறக்கப்படும் என வெளியான செய்தியடுத்து, பாமக தலைவர் அன்புமணி அதற்கு கண்டனங்களை தெரிவித்தார். அதை திசை திருப்புவதற்காக திமுக ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற, தமிழ் தாய் வாழ்த்து பாடல் குறித்து பிரச்சினையை எழுப்பினார்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications