“வியூகம் தெரியாமல்.. எதிரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்!” ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி பாராட்டு
கரூர்: "எதிரிகள் யாராக இருந்தாலும் எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும் வெற்றி நமக்குத்தான்! நாம்தான் ஜெயிக்கிறோம், நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்" என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக முப்பெரும் விழாவில் பேசியுள்ளார்.
அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்தநாள், திமுக உதயமான நாள் என மூன்று பெரும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவை திமுக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. 1974ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை திமுக கொண்டாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி இந்த ஆண்டின் முப்பெரும் விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், திமுக கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி முன்னின்று மேற்கொண்டார். முப்பெரும் விழா ஒருங்கிணைப்பாளரான செந்தில் பாலாஜி இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றினார்.
செந்தில் பாலாஜி பேசுகையில், "திராவிட சூரியனான முதல்வர் கழகத் தலைவரை அன்புடன் வரவேற்கிறேன். உங்களின் வியூகம் என்னவென்று தெரியாமல், எதிரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். உங்களுக்கு என்றும் நன்றிக்கு உரியவனாகவும் நன்றி மாறாதவனாகவும் இருப்பேன். புன்னகையால் அரவணைக்கும் புன்னகையால் எதிரிகளை ஓட ஓட விரட்டும் இளைய சூரியனை வரவேற்கிறோம். அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
2026 தேர்தல் வெற்றிக்கணக்கை இங்கிருந்தே தொடங்குவோம். எதிரிகள் யாராக இருந்தாலும் எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும் வெற்றி நமக்குத்தான்! நாம்தான் ஜெயிக்கிறோம், நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்! வெல்வோம் 200, படைப்போம் வரலாறு" என செந்தில் பாலாஜி பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், செந்தில் பாலாஜியை புகழ்ந்தார். ஸ்டாலின் பேசுகையில், "மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் செந்தில் பாலாஜி. பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. நாம கோடு போட சொன்னால் ரோடு போடுவார். ரோடு போட்டு அந்த ரோடு மேலதான் நான் வாகனத்தில் வந்தேன்.
செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியாது என்று அவரை முடக்கப் பார்த்தார்கள். ஆனால் அவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவார். நான் உறுதியாகச் சொல்கிறேன். கழக வரலாற்றில் இப்படியொரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடைபெற்று இருக்காது" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications