கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: கரூர் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கரூர் சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையே அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் அவர் ஏற்கனவே பிரச்சாரம் செய்துவிட்டார். இன்று அவர் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திட்டமிட்ட நேரத்தை விட சற்று கால தாமதமாக விஜய் சென்றதாக புகார் எழுந்தது.

கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விஜய் கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை என்று அந்தக் கட்சியினர் புகார் தெரிவித்தனர். கரூர் விஜய் கூட்டத்திற்கு சுமார் 10,000 பேர் வருவார்கள் என்று தவெகவினர் கூறியிருந்தனர். ஆனால் அதிகளவு கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, சேலத்தில் இருந்து மருத்துவக் குழுவினர் கரூர் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் சிறிது நேரத்தில் கரூர் செல்லவுள்ளார். அமைச்சர்கள் பலரும் கரூரில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications