ஜோதிமணி எம்.பி. மாட்டுவண்டி ஓட்ட.. நின்று கொண்டே ராகுல் பயணிக்க.. அடடே.. 'கலகல' கரூர்
கரூர்: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, இரட்டை மாட்டு வண்டியை ஓட்டி வந்த நிகழ்வை பார்த்த கரூர் விவசாயிகள் ஆராவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Recommended Video
தமிழகத்தில் கோவை, திருப்பூரை தொடர்ந்து இன்று கரூர் பகுதியில் 3-வது நாளாக ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் பகுதியினை அடுத்த மாரிக்கவுண்டன்பாளையத்தில் விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மத்திய அரசின் விவசாயிகள் சட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுடன் ராகுல் காந்தி விரிவாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் போது காரை நிறுத்தி விட்டு மாட்டுவண்டியில் ஏறி பயணம் செய்தார் ராகுல்.
ராகுல் பயணித்த இந்த இரட்டை மாட்டுவண்டியினை கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஓட்டினார். சுமார் 500 மீட்டர் தொலைவில் ராகுல்காந்தி மாட்டுவண்டியில் நின்ற படி விவசாயிகளைப் பார்த்து கையசைத்து சென்றதும், அந்த மாட்டுவண்டியை கரூர் எம்.பி. ஜோதிமணி ஓட்டி வந்ததையும் பார்த்த விவசாயிகள் ஆராவாரம் செய்தனர்.
டெல்லியில் இருந்து வந்த ராகுல்காந்தி நமது இரட்டை மாட்டுவண்டியில் வந்துள்ளாரே என்று விவசாயிகள் வியப்புடன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.