பிரச்சாரத்தில் காலியாக கிடந்த நாற்காலிகள்! ஓ.பி.எஸ். கடும் அப்செட்! அனல் பறக்கும் தேர்தல் களம்!
கரூர்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில், நாற்காலிகள் காலியாக இருந்தது அவரை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது.
அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேடையேறி பிரச்சாரம் செய்துவிட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கூட்டம் நிரம்பி வழிவது கவனிக்கத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். மாலை 6 மணிக்கு ஓ.பி.எஸ். வருவார் என கூறி ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் 8 மணியை கடந்தும் அவர் வராததால் கூட்டத்தில் இருந்து ஒவ்வொருவராக ஜூட் விடத் தொடங்கினர். அதிமுக நிர்வாகிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் யாரும் கேட்டதாக தெரியவில்லை.

ஓ.பி.எஸ். பிரச்சாரம்
இந்நிலையில் திண்டுக்கல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரூருக்கு இரவு8.30 மணிக்கு சென்ற ஓ.பி.எஸ். உற்சாகத்துடன் மேடையேறினார். ஆனால் அப்போதும் பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்ததை கண்டு கடும் அப்செட் ஆன அவர், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் தனது பிரச்சாரத்தை முடித்தார். ஏற்கனவே தாம் பங்கேற்கும் பிரச்சார நிகழ்ச்சிகளை நிர்வாகிகள் முறையாக ஏற்பாடு செய்வதில்லை என்ற வருத்தம் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

புன்னகை இல்லை
கோவையில் கூட ஓ.பி.எஸ். பிரச்சாரக் கூட்டத்திற்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆட்கள் அழைத்து வரப்படவில்லையாம். கரூரில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு திரண்ட அளவு கூட தனக்கு கூட்டம் திரளாததால், ஓ.பி.எஸ். முகத்தில் அவரது வழக்கமான புன்னகையை கூட காண முடியவில்லை என்கிறார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

கூட்டம் நிரம்பி வழிகிறது
இதனிடையே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களில் ஆட்கள் நிரம்பி வழிவது இங்கு கவனிக்கத்தக்கது. சிவகாசி, தூத்துக்குடி, சென்னை, ஆவடி, என பல இடங்களில் அவர் பேசும் பேச்சுக்கள் தான் ஊடகங்களில் கூட தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி என்கிற அளவுக்கு தினமும் அவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications