4 மணி நேரம் தாமதமாக விஜய் வந்தது ஏன்? CCTV காட்சியை அழிக்க பார்க்கிறார்கள்.. விஜய் வழக்கறிஞர் ஷாக்
கரூர்: கரூரில் ஆதாரங்களை அழிக்க பார்க்கிறார்கள், சிசிடிவி காட்சிகளை அழிக்க பார்க்கிறார்கள் என்று விஜய் வழக்கறிஞர் அறிவழகன் பேட்டி அளித்துள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய தசரா விடுமுறைக் கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் எஸ். அறிவழகன், செப்டம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நீதிபதி தண்டபாணி இல்லத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணாமலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது வழக்கறிஞர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த நீதிபதி தண்டபாணி, இது ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, நீதிபதி ஜோதிராமனுடன் கலந்துரையாடி, முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டு, எண் அளிக்கப்பட்டால், செப்டம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கு விசாரணை செய்யப்பட உள்ளது.
தவெக விஜய் வழக்கறிஞர் அறிவழகன் பேட்டி
இந்த வழக்கு தொடர்பாக தவெக விஜய் வழக்கறிஞர் அறிவழகன் பேட்டி அளித்துள்ளார். அதில், கரூரில் ஆதாரங்களை அழிக்க பார்க்கிறார்கள், சிசிடிவி காட்சிகளை அழிக்க பார்க்கிறார்கள். நிறைய ஆதாரம் இருக்கிறது, அதை நீதிமன்றத்தில் கண்டிப்பாக கொடுப்போம். சிபிஐதான் வலிமையான அமைப்பு என்பதால் அவர்களை விசாரிக்க சொல்கிறோம். இன்று மனுவை விசாரிக்கவில்லை என்றால், நாளை விசாரணைக்கு வரும்.
கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு அவசரமாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? அவசரமாக பிரேத பரிசோதனை செய்தது தவறு. பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கு பின் மிகப்பெரிய சதி இருக்கிறது. மிகப்பெரிய சதி வலை பின்னப்பட்டு இருக்கிறது.
கரூரில் மக்களே இதை பேசி வருகிறார்கள். விஜய் தாமதமாக வரவில்லை. அவர் கூட்டம் காரணமாக மெதுவாக வர வேண்டி இருந்தது.முன்னால், பின்னால் வாகனங்கள் இருந்ததால் பாதுகாப்பாக மெதுவாக வந்தார். 6.30 மணி வரை பேசுவதற்கு அனுமதி இருந்தது. அதனால் விஜய் மீது தவறு இல்லை. கரூரில் ஆதாரங்களை அழிக்க பார்க்கிறார்கள்.. நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.. ஆனால் அந்த சிசிடிவி காட்சிகளை அழிக்க பார்க்கிறார்கள்.
அதனால் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். இன்று விசாரிக்கவில்லை என்றால் நாளை அல்லது வெள்ளிக்கிழமை விசாரணை செய்யப்படும். நாங்கள் ஆதாரத்தோடு இருக்கிறோம். நிறைய ஆதாரங்கள் கையில் உள்ளது. அதை கொடுப்போம்.. ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளோமா என்று இப்போது முடிவு எடுக்க மாட்டோம்.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதே இப்போது முக்கியம்.. என்று விஜய் வழக்கறிஞர் அறிவழகன் பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications