Karur: விஜய்யின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்.. 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸ்!
கரூர்: கரூரில் நடைபெற்ற விஜய்யின் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக கொலை முயற்சி, பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி நேற்று விஜய் நாமக்கல் மற்றும் கரூரில் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டார்.

கரூர் விஜய் பயணம்
நாமக்கல்லிலும் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. தொடர்ந்து விஜய் கரூர் வந்த போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள், மக்கள் குவிந்து வரவேற்பு அளித்தனர். விஜய் வருவதாகத் தகவல் தெரிந்தவுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கரூர் 100 அடி சாலையில் திரண்டனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில், விஜயின் வேனுக்கே அருகில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.
38 பேர் உயிரிழப்பு
விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த ஒரு பெண் திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் உரையை முடித்து வெளியேறியதும் நிலைமை மேலும் மோசமடைந்தது. நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். 38 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆண்கள், குழந்தைகள், பெண்கள் என 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 58 ஆக உள்ளது. இதில் 12 பேரின் நிலைமை மிகுந்த ஆபத்தாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் மருத்துவமனை தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி, பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கினர். இதில் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் கரூரில் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஒருநாள் கடைகள் அடைக்கப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
விஜய் இரங்கல்
முன்னதாக சென்னை வந்த விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ”இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டார். இந்த சம்பவம் நடந்து சுமார் 3 மணி நேரத்திற்கு பின் விஜய் இரங்கல் தெரிவித்தது விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications