விஜய் கைது செய்யப்படுவாரா? முதலமைச்சர் சொன்ன பதில்! கரூர் மருத்துவமனையில் மு.க. ஸ்டாலின்
கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு கரூர் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், விஜய் கைது செய்யப்படுவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
விடியற்காலை 3 மணியளவில் கரூர் வந்தடைந்த முதலமைச்சர், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர் பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேட்டியளித்ததாவது,

"மிகுந்த துயரத்தோடு, மிகவும் கனத்த இதயத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்திருக்கக் கூடிய இந்த கொடூரமான துயரத்தை பற்றி விவரிக்க முடியாது. அந்த அளவுக்கு ஒரு சோக சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. அதை பற்றி விவரமா சொல்லக்கூடிய மனசு இடம் கொடுக்கல. அந்த அளவுக்கு நானும் வேதனையில் இருக்கிறேன்.
நேற்று இரவு ஒரு 7.45 மணிக்கு சென்னையில அதிகாரிகளோடு கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, கரூரில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டிருக்கு, கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்ட பலபேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று செய்தி கிடைத்தது. செய்தி கிடைத்த உடனே இந்த செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு போங்க என சொன்னேன். அப்புறம் கலெக்டரை தொடர்பு கொண்டு நான் கேட்டபோது அவரும் சில விஷயங்களை சொன்னார். அடுத்த 5 நிமிடங்களில் அதிகமானவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள் என்றும், மரண செய்திகளும் வந்துவிட்டது.
இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனவே சுற்றுவட்டார மாவட்டத்தினுடைய அமைச்சர்களை தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பினேன். இத்துடன் இல்லாமல் டிஜிபி, ஏடிஜிபி ஆகியோருக்கும் போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன்.
நான் தலைமைச் செயலகத்திற்கு போய், அங்க நம்முடைய மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டேன்.
அரசு அதிகாரிகள், பக்கத்து மாவட்ட மருத்துவர்கள் எல்லாம் உடனடியாக கரூருக்கு போக உத்தரவிட்டேன். இப்படிப்பட்ட நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த சம்பவத்தில் மொத்தம் 39 உயிர்கள் இதுவரைக்கும் நம்ம இழந்திருக்கிறோம். இதுல ஆண்கள் 13 பேர், பெண்கள் வந்து 17 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண் குழந்தைகள் 5 பேர் என உயிரிழந்திருக்கிறார்கள்.
ஒரு அரசியல் கட்சி நடத்தின கூட்டத்தில், இத்தனை பேரை இழந்த துயரமான சம்பவம் என்பது இதுவரை நடக்காதது. இனிமேலும் நடக்க கூடாது. மேலும் 51 பேர் தீவிர சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் வந்து 26 பேர் ஆண்கள் 25 பேர் பெண்கள். இவங்க எல்லாரும் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என நம்புகிறேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு கனத்தை இதயத்துடன் அஞ்சலி செலுத்துகிறேன். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நான் அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் விஜய் கைது செய்யப்படுவாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications