அதிமுக ஒரு போதும் தலைவணங்காது - கிருஷ்ணகிரியில் சசி, தினகரனை கிடுகிடுக்க வைத்த முதல்வர் பழனிச்சாமி
அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். டிடிவி தினகரன் நினைப்பது ஒருபோதும் நடக்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி: அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அதிமுகவை கைப்பற்ற சதித் திட்டம் தீட்டி வருகிறார்கள் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அடிமட்ட தொண்டர்கள் தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும் என்றும் ஒரு குடும்பத்திற்கு எப்போது அதிமுக அடிபணியாது என்றும் ஆவேசமாக பேசியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா, அதிமுக மீண்டு எழும் என்றும் ஒரு தாய் பிள்ளைகளாக இணைந்து திமுகவை எதிர்ப்போம் என்று கூறினார். அன்புக்கு நான் அடிமை என்று சொன்ன சசிகலா, அதிகாரத்திற்கு நான் அடிபணிய மாட்டேன் என்றும் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறினார். திமுகதான் பொது எதிரி என்று சொன்ன சசிகலா ஒற்றுமையாக இருப்போம் என்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
டிடிவி தினகரன் தனது பேட்டியில், திமுக ஆட்சியைப் பிடிக்க விடமாட்டோம். அமமுகவைத் தொடங்க முக்கிய காரணம் அதிமுகவை மீட்டெடுப்பதற்கும், தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும்தான் என்றும் சொன்னார். திமுக ஆட்சிக்கு வர கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக எதையும் செய்வோம். அதிமுக பொது குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிக்கலாவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று கூறினார் டிடிவி தினகரன்.
வேலூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். டிடிவி தினகரன் 10 ஆண்டுகள் கட்சியில் கிடையாது, ஜெயலலிதா அவரை நீக்கியிருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்ற டிடிவி தினகரன் முயற்சி செய்தார் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவை கைப்பற்றி திமுகவிற்கு மறைமுகமாக உதவ முயற்சிப்பவர்களின் முயற்சி சுக்குநூறாக முறியடிக்கப்படும்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் சதி திட்டம் தீட்டுகின்றனர். மறைமுகமாக உதவி செய்யும் சதி திட்டத்தை முறியடிப்போம். சதிவலையை தூள்தூளாக உடைப்போம் என்றும் கூறினார்.
டிடிவி தினகரனை நம்பி சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். அதிமுகவை கைப்பற்ற நினைப்பவர்களை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் பதவி இழந்து நடுரோட்டில் நிற்கின்றனர் எனவே யாரும் அவரை நம்பி சென்று விட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
நேற்றைய தினம் சசிகலா, தினகரனை தாக்கி பேசிய முதல்வர் பழனிச்சாமி, இன்றைய தினம் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கி பேசினார். நான்கு ஆண்டு காலம் எதை எதையோ செய்து பார்த்தார் டிடிவி தினகரன் எதுவும் நடக்கவில்லை. அவர் கட்சியிலேயே இல்லை. அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அதிமுகவை கைப்பற்ற நினைக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
அவர்களை ஒருபோதும் அதிமுகவுடன் இணைக்க முடியாது என்று சசிகலா, தினகரன் பற்றி கூறிய முதல்வர். ஒரு போதும் அவர்களுக்கு அதிமுக தலை வணங்காது என்றார். சிலர் திட்டமிட்டு அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சதித் திட்டம் தீட்டி வருகிறார்கள். ஒரு குடும்பத்திடம் அதிமுக அடிபணியாது. அடிமட்ட தொண்டர்கள் தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும் என்றும் முதல்வர் கூறினார். வேலூரில் சசிகலா, தினகரனை வெலவெலக்க வைத்த முதல்வர் பழனிச்சாமி, கிருஷ்ணகிரியில் ஆவேசமாக பேசி கிடுகிடுக்க வைத்திருக்கிறார்.