கூட்டணிக்குள் குத்து வெட்டு.. பாமக பொறுப்பாளர் மண்டையை உடைத்ததாக பாஜக நபர் மீது புகார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் பாஜக வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது பாமக பொறுப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அது போல் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

அது போல் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. எனவே இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலின் போது பல அதிரிபுதிரியான விஷயங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
நேற்று முன் தினம் இரவு தேர்தல் நடத்தை விதிகளை மீறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதிக்குள்பட்ட ஆவாரம்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் அதை தட்டி கேட்ட திமுகவினரை பாஜகவினர் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், அண்ணாமலை மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த செல்லம்பட்டி கிராமத்தில் நேற்று இரவு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நரசிம்மன் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். பரப்புரைக்காக செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாமக ஒன்றிய துணை செயலாளர் ரங்கன் (55) என்பவரிடம் கொடி கட்டுவதற்கும் மற்ற செலவினங்களுக்காக பாஜகவினர் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பரப்புரையின் போது அங்கு வந்த செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் (35) என்பவர் தான் ஒரு பாஜக நிர்வாகி எனவும் எனக்கு ஏன் தகவல் அளிக்கவில்லை எனவும், பரப்புரைக்காக கொடுக்கப்பட்ட பணத்தில் எனக்கு ஏன் பணம் தரவில்லை என ரங்கனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அத்துடன் அவரை கீழே தள்ளி மண்டையை உடைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேட்பாளரை உள்ளே வரவிடாமல் தடுத்ததோடு, பாஜகவினரை கடுமையாக சாடியதாகவும் தெரிகிறது. சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட ரங்கன் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ராணுவத்தில் பணிபுரிந்த வந்த ஜெகநாதன், விடுமுறையில் வந்து மதுபோதைக்கு அடிமையாகி விட்டதாகவும் கடந்த ஓராண்டாக பணிக்கு செல்லாமல் இருந்து வருவதாவும் கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரப்புரையில் ஆங்காங்கே பாஜகவிற்கும் பாமகவிற்கும் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் இரு வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகள் ஒன்றிணையும் போது நிறைய தகராறுகள், கைகலப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன.












Click it and Unblock the Notifications