உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? ஒன்று விடாமல் புட்டு புட்டு வைத்து.. ஓபிஎஸ் மீது மாஜி சரமாரி அட்டாக்
கிருஷ்ணகிரி: சமீபத்தில் அதிமுகவை ஒருங்கிணைக்க ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது ஓபிஎஸ்-யை கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி.
Recommended Video
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுகவின் கடைசி பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், ஓபிஎஸ் கட்சியை பலப்படுத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இவ்வாறு அழைப்பு விடுப்பதற்கு ஓபிஎஸ்-க்கு எவ்வித்த தார்மீக உரிமையும் இல்லையென முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமி ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். நீதிமன்றமும் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்நிலையில், "ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இடைக்கால பொதுச் செயலாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதிமுகவில் பொதுக்குழுவின் முடிவே இறுதியானது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. உள்கட்சி விவகாரம், நிர்வாக விஷயங்களில் நீதிமன்றம் தலையிட்டு கருத்து தெரிவிக்க எந்த அதிகார வரம்பும் இல்லை" என எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, "ஓபிஎஸ் சுயநலவாதி, அனைவரும் வாருங்கள் என அழைப்பதற்கு ஓபிஎஸ்-க்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு இருவரும் கையொப்பம் இட்டுதான் அனைவரையும் அழைத்தார்கள். பொதுக்குழுவுக்கு முந்தைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கருத்து இருந்தது. இதற்கிடையில் பல்வேறு வகையில் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஓபிஎஸ் ஈடுபட ஆரம்பித்தார்" என குற்றம் சாட்டினார்.
மேலும், "கட்சி தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசிக்காமல் மூன்றாவது நபரைப் போல நீதிமன்றம் சென்றார். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்தவர் அதிமுகவுக்காக எந்தத் தியாகமும் செய்யாதவர் ஓபிஎஸ். ஏதோ ஒரு சூழ்நிலையில் கிடைத்த வாய்ப்பால் சட்டமன்ற உறுப்பினர் ஆகி வருவாய்த்துறை அமைச்சராகினார். சூழ்நிலையால் அவரை ஜெயலலிதா முதலமைச்சர் ஆக்கினார். உண்மையான தொண்டர்கள் தலைமை கழகம் சென்றிருந்தால் தலைமை அலுவலகத்திற்குச் சிறு மாசு கூட ஏற்பட அனுமதித்திருக்க மாட்டார்கள்.
தலைமை அலுவலகத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். இதனால்தான் ஓபிஎஸ் எங்களை அழைப்பதற்கான தார்மீக உரிமையை இழந்திருக்கிறார். அதிமுகவில் இருப்பதற்கு எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக ஒபிஎஸ் இருக்கிறார். அப்படிப்பட்ட நபரை விமர்சிக்கக் கூட நாங்கள் வெட்கப்படுகிறோம். ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கு எந்தவித தார்மீக அடிப்படையும் இல்லை. ஓபிஎஸ் தன்னுடைய சுயநலத்திற்காகக் கட்சியையும், கட்சித் தலைமையையும் பயன்படுத்தியுள்ளார் அதேபோல் சசிகலாவையும் பயன்படுத்தி இருக்கிறார்" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கே.பி.முனுசாமி ஓபிஎஸ் மீது வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications