அதிமுக வலையில் சிக்கிய கிருஷ்ணகிரி திமுக புள்ளி! கோட்டை விட்ட அமைச்சர் சக்கரபாணி! என்ன பின்னணி?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த திமுக முக்கிய புள்ளி ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் ஐக்கியமாகியிருப்பது அறிவாலயத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் திமுக ஒன்றியச் செயலாளராக இருந்தவர் கோவிந்தராஜன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு 852 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். இருப்பினும் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஆக்டிவாக இயங்கி வந்த இவர், உள்ளாட்சித் தேர்தல் மூலம் தனது மனைவியை பர்கூர் ஒன்றியச் சேர்மன் ஆக்கினார்.

இந்நிலையில் ஒன்றிய நிர்வாகப் பணிகளில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் தலையிடுவதாக கூறி மாவட்ட பொறுப்பு அமைச்சரான சக்கரபாணியிடம் பல முறை முறையிட்டிருக்கிறார். 4 மாதங்களுக்கும் மேலாக சக்கரபாணி இது குறித்து என்னவென்று கூட அழைத்து விசாரிக்காததால் திமுகவில் கடும் அதிருப்தி மனநிலையிலேயே தொடர்ந்திருக்கிறார். இந்த நேரம் பார்த்து அதிமுக தூது விட்டிருக்கிறது.
அதேபோல் அதிமுகவின் மேல்மட்ட முக்கியப் புள்ளி ஒருவரே அழைத்தும் பேசியிருக்கிறார். இதனால் ஒன்றியச் சேர்மனாக உள்ள தனது மனைவி உட்பட 8 ஒன்றிய கவுன்சிலர்களுடன் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார் கோவிந்தராஜன். இவர் அதிமுகவில் இணைந்தது அமைச்சர் சக்கரபாணிக்கு வேண்டுமென்றால் எந்த இழப்பையும் தராமல் இருக்கலாம், ஏனெனில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடப்போவதில்லை, அரசியல் செய்யப் போவதில்லை. அவர் திண்டுக்கல் மாவட்டக்காரர்.
ஆனால் இந்த நிகழ்வு திமுகவுக்கும் திமுகவின் ஓட்டு வங்கிக்கும் பர்கூரில் பாதகம் ஏற்படுத்தக் கூடும். ஏனெனில் பர்கூரை பொறுத்தவரை அது அதிமுக கோட்டையாக கருதப்படும் தொகுதி. இதனிடையே திமுகவிலிருந்து அதிமுகவில் இணைந்த பிறகு கோவிந்தராஜன் கூறியதாவது; ''யாருக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என்பது முதல் எல்லா விவகாரங்களிலும் எம்.எல்.ஏ. தலையிட்டால், அப்புறம் எதற்கு ஒன்றியச் சேர்மன் என்ற பதவி இருக்கு, மாவட்டச் செயலாளரிடம் நான் டெண்டர் கேட்டோ, சிபாரிசு கேட்டோ சென்றதில்லை.''
''மரியாதை ஒன்றைத் தான் எதிர்பார்த்தேன். அது கிடைக்கவில்லை. மாவட்ட பொறுப்பு அமைச்சரான சக்கரபாணி எங்க பகுதிக்கு வருகிறார் என்றால் அந்த தகவலை கூட என்னிடம் யாரும் சொல்வதில்லை. 4 மாசமாக சக்கரபாணி பிரச்சனையை பேசி தீர்த்து வைப்பார் என்று பார்த்தேன். அது நடக்கவில்லை. திமுக தலைமை மீது எனக்கு வருத்தம் இல்லை. மனம் வெறுத்துப் போய் தான் அதிமுகவில் இணைந்தேன்'' என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications