கிருஷ்ணகிரியில் வீடு வீடாக யார் பாருங்க? விநாயகர் சிலையுடன் 100 இல்லங்களுக்கு போன இஸ்லாமியர்! சபாஷ்
கிருஷ்ணகிரி: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் பல அடி உயரத்தில் பிரம்மாண்டமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சிலைகளுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் பதற்றமான இடங்களில் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், கிருஷ்ணகிரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை வந்தாலே, திருப்புவம் முதுவந்திடல் கிராமமாக இருந்தாலும்சரி, தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கிராமமாக இருந்தாலும் சரி, களைகட்டிவிடும். இங்குள்ள இந்துக்கள் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

பள்ளிவாசலில் அனுமதி
ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கம். அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதியை பெற்ற பிறகே இந்துக்கள் அவைகளை அங்கு தொடங்குவார்கள்..
அதேபோல, இஸ்லாமியர்கள் வேண்டுதல் முறைகள் கடுமையாக இருக்கும் என்பதால், இந்துக்களும் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடனை செலுத்துவர். இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதம் இருந்து, வேண்டுதல் நிறைவேறிய பின்பு, விறகு கட்டைகளை தானமாக தருவார்கள். பள்ளி வாசல் முன்பாக, மிகப்பெரிய அளவில் குழி வெட்டி, அதிகாலையில் கண்மாயில் நீராடிய பிறகு, ஆண்கள் வரிசையாக 3 முறை தீக்குழி இறங்குவார்கள்.
கிருஷ்ணகிரியில் சிலிர்ப்பு
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது..
இங்கு ஒவ்வொரு வருடமும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மிலாடி நபி குழு சார்பில் பூஜை பொருட்கள் வழங்கி வருவது வழக்கம். அதன்படி, சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி, அவற்றுடன் பூஜைக்கு தேவையான பூமாலை, பழங்கள் போன்றவற்றை வைத்து, இந்துக்களின் வீடுகளுக்கு நேரிலேயே கொண்டு சென்று வழங்கினார்கள்.
வீடு வீடாக சிலைகளை ஏந்தி
கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டியில் மிலாடி நபி குழு தலைவர் அஸ்லம் தலைமையில் இஸ்லாமியர்கள் வீடு, வீடாக சென்று ஒரு அடி விநாயகர் சிலைகள், ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், கற்பூரம், ஊதுப்பத்தி, பூக்கள் அடங்கிய தட்டுக்கள் வழங்கப்பட்டன.
வீடு வீடாக, விநாயகர் சிலைகளை கைகளில் ஏந்திக்கொண்டு, இந்துக்களின் வீடுகளில், இஸ்லாமிய சகோதரர்கள் வழங்கி சென்றது காண்போரை சிலிர்க்க வைத்தது..
இதுகுறித்து மிலாடி நபி குழு தலைவர் சொல்லும்போது, 15 ஆண்டுகளாக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தியன்று பூஜை பொருட்கள் வழங்கி வருகிறோம். நிகழாண்டில் 100 வீடுகளுக்கு விநாயகர் சிலைகளுடன், பூஜை பொருட்கள் வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்..
இந்து முஸ்லிம் ஒற்றுமை
இந்நிகழ்வில், பீர்தேஸ்கான், காரமத், ஜமீர், சமீயுல்லா, ரியாஸ், பப்லு, நயாஸ், இர்பான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும், நகராட்சி கவுன்சிலர்கள் வேலுமணி, ஜெயகுமார், சந்தோஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்து - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலகாலத்துக்கும் இணக்கமாகவே பயணித்து வருகிறது என்பதற்கு இன்னொரு உதாரணமாக கிருஷ்ணகிரியில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மக்களிடையே மத மோதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைய முயற்சிக்கும் சிலருக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்நிகழ்வு நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications