கரும்பு விவசாயி சின்னத்தால் ஆத்திரம்.. வேட்பாளரை அடித்து துவைத்த நாதக தொண்டர்கள்.. 3 பேர் கைது!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வழிமறித்து தாக்கிய நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில், திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் முனி ஆறுமுகம், கடந்த மார்ச் 28ஆம் தேதி தனது வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு, ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது, பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த 20க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த வேட்பாளர் முனி ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திராவிட தெலுங்கு தேசம் கட்சி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரத ஐக்கிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் தேசிய கட்சியாக பதிவு செய்யப்பட்ட பாரத ஐக்கிய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் முனி ஆறுமுகத்திற்கு கரும்பு விவசாயி சின்னத்தை வழங்கியுள்ளது பாரத ஐக்கிய மக்கள் கட்சி.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனைக்கு பிறகு, முனி ஆறுமுகம் காரில் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கும்மனூர் சாலை சந்திப்பில், இவரது காரை மடக்கிய, 20க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அவரை வேட்பு மனுவை வாபஸ் பெற சொல்லி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து முனி ஆறுமுகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில், குருபரப்பள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, கிருஷ்ணகிரி நகர செயலாளர் அருண்மொழி, மாவட்டச் செயலாளர் நரேஷ் குமார் மற்றும் கமல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி நாம் தமிழர் கட்சி பல முறை முறையிட்டும் கிடைக்காத நிலையில், மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications