சிசிடிவிக்கு ஸ்பிரே.. கிருஷ்ணகிரியில் ஏடிஎம்மை உடைத்து பணத்தை அள்ளி சென்ற கும்பல்.. எவ்வளவு தெரியுமா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று ரூ.16 லட்சம் நிரப்பப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலையில் ஒரு கும்பல் சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்து ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் குருபரபள்ளி எனும் கிராமம் உள்ளது. இங்குள்ள சிப்காட் பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் அமைந்துள்ளது. நேற்று மாலையில் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பப்பட்டது. ரூ.16 லட்சம் மதிப்பிலான பணம் ஏடிஎம் மையத்தில் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இன்று அதிகாலை 5 மணிக்கு ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடந்தது. பணம் எடுக்க சென்றவர் ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று ஏடிஎம் மையத்தை பார்வையிட்டனர். அப்போது சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதோடு முதற்கட்ட விசாரணையில் அதிகாலை 3 மணியளவில் ஏடிஎம் மையத்துக்கு காரில் வந்த கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி நேற்று மாலையில் தான் ஊழியர்கள் வந்து ஏடிஎம்மில் பணத்தை நிரப்பி வைத்துள்ளனர். இதனால் கொள்ளை கும்பல் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை அள்ளி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனாலும் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றிய சரியான தகவல் என்பது வங்கி அதிகாரிகள் கூறிய பிறகு தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தற்போது போலீசார் அந்த பகுதியில் பிற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளை கும்பலின் போட்டோக்கள் பதிவாகி உள்ளதா என ஆராய்ந்து வருகின்றனர். மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட உள்ளது. இந்த தனிப்படை போலீசார் கைது நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.
இதற்கிடையே தான் சம்பவ இடத்துக்கு எஸ்பி தங்கதுரை சென்று பார்வையிட்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் ஏடிஎம் மையம், ஏடிஎம் இயந்திரத்தில் பதிவாகி உள்ள கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் கிருஷ்கணகிரி மாவட்டம் குருபபள்ளி சிப்காட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications