வாடகை வீட்டுதாரருக்கு குஷி.. அதைவிடுங்க, பிஎம் ஆவாஸ் யோஜனாவில் கை வைத்த 13 பேர்.. தமிழக அரசு ஆக்ஷன்
கிருஷ்ணகிரி: பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக 13 அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டமானது, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றும் வகையில், அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதற்காக துவங்கப்பட்ட திட்டமாகும்.

இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் வட்டி விகிதம் குறைவு. வீட்டின் அளவை பொறுத்தே மானிய தொகை வழங்கப்படுகிறது.. இந்த கடனை திருப்பி செலுத்த 20 ஆண்டுகள் அவகாசமும் தரப்படுகிறது.
ஆவாஸ் யோஜனா: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவை பயன்படுத்த, குடும்ப வருமானம் வருடத்துக்கு ரூ.18 லட்சத்திற்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும்.. அதற்கு மேல் வருமானம் இருந்தால் இந்த திட்டத்திற்கு தகுதியானவர் கிடையாது என்பது இதுநாள்வரை விதிமுறையாக இருந்தது. ஆனால், கடந்த வாரம் இதில் சலுகை தரப்பட்டுள்ளது.
அதன்படி, 120 சதுர மீட்டர் (சுமார் 3 சென்ட் அளவு) பரப்பளவு வரையிலான வீடு கட்ட, வீட்டு கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே வட்டி மானியம் அளிக்கப்பட உள்ளது... இவர்களின் ஆண்டு வருமானம் ரூ.9 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அதாவது 18 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு இனி வட்டி மானியம் கிடைக்காது. 9 லட்சத்திற்குள் வருமானம் உள்ளவர்களுக்கு வட்டி மானியம் கிடைக்கும்.. நகர்புறங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் வருமான உச்சவரம்பு, பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
கிருஷ்ணகிரி: இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில், கிருஷ்ணகிரியை சேர்ந்த அரசு அதிகாரிகள் 13 பேர் முறைகேட்டில் சிக்கியிருக்கிறார்கள்.. அதாவது, கிருஷ்ணகிரிக்கு ஒதுக்கிய நிதியை, கையாடல் செய்தோருக்கு எதிராக நடவடிக்கை கோரி, சென்னை ஹைகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.
கையாடல்: நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கங்காதரன் என்பவர், கடந்த 2021-ல் இந்த பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அப்போதைய இணை இயக்குநர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி அறிக்கையை ஒப்படைத்தார். இதையடுத்து, 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
வாதங்கள்: மேலும், "கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 13 அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், உத்தரவு பிறப்பிக்க அவசியமில்லை என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
அடுத்தடுத்த புகார்கள்: பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி முறைகேட்டில், கிருஷ்ணகிரியை சேர்ந்த 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது, மிகுந்த கவனம் பெற்று வருகிறது.
கடந்த 2016 முதல் 2020-ம்ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அதிகாரிகள் 50 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது... பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி என்று இதுகுறித்து அதிகாரிகள் அப்போதே கூறியிருந்தனர்.
வழக்கு பதிவு: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளை கட்டாத பயனாளிகளுக்கு விதிகளை மீறி சட்ட விரோதமாக ரூ.31.66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மே மாதத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 50 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications