சந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி
கிருஷ்ணகிரி: நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு நிச்சயம் அரசியல் கட்சியை தொடங்குவார் என அவரது உடன் பிறந்த சகோதரர் சத்தியநாராயண ராவ் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் இந்தக் கருத்தை அவர் நேற்று கிருஷ்ணகிரியில் தெரிவித்தார்.
மேலும், 2021-ல் முதலமைச்சர் வேட்பாளராக ரஜினி போட்டியிடுவார் என்றும், அதற்கு முன்பாகவே தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் அவர் தெரிவித்தார்.

ரூ. 3 லட்சம் பாலம்
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில், காவேரிப்பட்டணம் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் ரூ.3 லட்சம் மதிப்பில் சிறுபாலம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ரஜினி பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர் மன்றத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.

ராவ் உறுதி
அந்த சிறுபாலத்தை தொடங்கி வைக்க வந்த ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன், தனது தம்பி வரும் 2020-ம் ஆண்டு உறுதியாக அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும், ரஜினி கூறிய அதிசயம், அற்புதம் எல்லாம் 2021-ல் நடக்கும் என்றார்.

சுற்றுப்பயணம்
இதனிடையே கட்சி தொடங்குவதோடு மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணமும் மேற்கொள்வார் என்றும், அப்போது அனைத்து தரப்பு மக்களையும் ரஜினி சந்தித்து பேசுவார் எனவும் அவரது அண்ணன் சத்தியநாராணன் ராவ் தெரிவித்துள்ளார்.

நலத்திட்டம்
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அவரது அண்ணன் அளித்த பேட்டி மகிழ்ச்சியை தந்துள்ளது. இம்மாதம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ள மேலும் பல நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார் சத்தியநாராயண ராவ்.












Click it and Unblock the Notifications